Lok Sabha Election 2024: 10 ஆண்டுகளில் சிறு, குறு தொழில்களை காலி செய்த பெருமை பாஜகவையே சாரும் - ஜி.ராமகிருஷ்ணன்
ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக தெரிவித்து இன்று இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்க காரணமே பாஜகவின் செயல் தான்.
![Lok Sabha Election 2024: 10 ஆண்டுகளில் சிறு, குறு தொழில்களை காலி செய்த பெருமை பாஜகவையே சாரும் - ஜி.ராமகிருஷ்ணன் Lok Sabha Election 2024 G.Ramakrishnan says The credit of emptying small and micro industries in ten years belongs to BJP - TNN Lok Sabha Election 2024: 10 ஆண்டுகளில் சிறு, குறு தொழில்களை காலி செய்த பெருமை பாஜகவையே சாரும் - ஜி.ராமகிருஷ்ணன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/8a3593699bdef0a608f81c8d421005021712883851603113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது, மாநில உரிமைகளை பறித்து நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே கேள்விக்குறியாக மாறிவிடும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பின் காரணமாக அன்றாட மக்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாக மாறி உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து துறைகளின் செயல்பாட்டுகளையும் சூறையாடிய மோடி அரசு சாதாரண ஏழை எளிய மக்களின் நலன் மீது அக்கறை காட்டாமல் கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. தேர்தல் காலம் என்பதால் தொடர்ந்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாயை தராமல் தமிழக மக்களுக்கு துரோகம் இளைத்துள்ளார். குறிப்பாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை 29 பைசா கணக்கெட்டில் தான் வழங்கப்பட்டு வருவது, தொடர்ச்சியாக மாநில உரிமைகளை பறித்து வரும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி மக்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜக முயற்சித்த போது மாநிலங்கள் அவையில் மெஜாரிட்டி இருந்தபோது அது நிறைவேறியது. ஆனால் மக்கள் அவையில் எடப்பாடி அதிமுகவும், பாமக அன்புமணியும் ஆதரவு தெரிவித்ததால் தான் குடியுரிமை திருத்த சட்டம் அமலானது. இதனால் அதிமுக, பாமக அரசியல் பாவம் செய்தவர்களாக கருதுகிறேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இன்று சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் அரசாக பாஜக இருக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் போக்கையே பாஜக செய்து வருகிறது என குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அப்போதெல்லாம் விலை குறைப்பு செய்யாத மோடி அரசு தேர்தல் நாடகத்தின் ஒரு பகுதியாக இன்று கேஸ் விலையை குறைத்துள்ளது. வேடிக்கையாக உள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு தான் கேஸ் விலை குறைத்துள்ளதாக பாஜக பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நாடகத்திற்காக கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கட்டப்படாத மருத்துவமனைக்கு இன்று பெரிய அளவில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மருத்துவ மாணவர்களின் கனவை சீர்குலைத்த நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை இதுவரை மோடி அரசு ஏற்காதது ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பாழாக்கும் செயல் எனவும் தெரிவித்தார். தொடர்ச்சியாக மாநில உரிமைகளை பறித்து வரும் மோடி அரசு, அமலாக்கத்துறை வருமான வரித்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளை வைத்துக்கொண்டு மதச்சார்பின்மைக்கு எதிராக போராடும் தலைவர்கள் மீது ஏவுதலை செய்து வரும் பணியை மோடி அரசு செய்து வருகிறது என தெரிவித்த அவர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் உள்ளிட்டோரை சீர்குலைக்க இது போன்ற செயல்களை பாஜக செய்து வருவதாகவும் எது செய்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் எனவும் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி வருவாயில் பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநில அரசிற்கு வரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றார்கள். குறிப்பாக தமிழகத்திற்கு 29 பைசாவும், கர்நாடகாவிற்கு 16 பைசா, தெலுங்கானா 40, கேரளம் 60 பைசா என்ற அடிப்படையிலேயே பணம் திருப்பி தரப்படுகிறது எனவும் மத்திய அரசின் இந்த செயல் மாநில அரசின் நலத்திட்டங்களை பெரிய அளவில் பாதிப்படைய செய்து வருவதாக தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் சிறு குறு தொழில்களை காலி செய்த பெருமை பாஜகவையே சாரும். இதனால் ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக தெரிவித்து இன்று இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்க காரணமே பாஜகவின் செயல் தான். பாஜக ஆளும் மாநிலங்களில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாக தமிழகத்திற்கு வேலை தேடி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். ஒன்றிய பிரதமர் மோடி குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. கூட்டணி சேர்ந்து விட்டால் அவர்கள் செய்த தவறை மறைத்து பேசுவது பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு நல்லதல்ல. உலக மகா ஊழல் கட்சியாக பாஜக இருக்கிறது, தற்போது பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகம் பேர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகவே உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை பட்டியல் தற்போது நாட்டு மக்களுக்கு தெரிந்தவுடன் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றிய மோடி அரசு தற்போது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்கு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் எனவும் தெரிவித்தார். வருமான வரி, வெளிநாட்டு நிதி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் நிதியினை தவறாக ஒன்றிய பாஜக அரசு செலவிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்டவை. ரிசர்வ் வங்கியின் பணத்தை முறையில்லாமல் செலவிட்டதால் இன்று பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசன சட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் தங்களின் அஜெண்டாவிற்கு ஏற்றபடி மாற்றும் செயலை பாஜக செய்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கான பதிலடியை மக்கள் தருவார்கள் எனவும் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு சட்ட சமூக பாதுகாப்பை உறுதி செய்திட விவசாய தொழிலை பாதுகாத்திட மதவாத வகுப்புவாத பிரிவினைவாத சக்திகளை முறியடித்திட தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றவும் மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)