AIADMK Alliance Seat Sharing: பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான லிஸ்ட்
AIADMK Alliance Seat Sharing: பாஜகவுடன் நாளை தொகுதி உடன்பாடு ஏற்படவுள்ளது. இதே போல அடுத்த 4 நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் முடிவு செய்யப்படும் என அமித்ஷாவை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல்- தொகுதி பங்கீடு தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 33 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து இறுதிக்கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, கொ.ம.தே.க, ஐ.யு.எம்.எல், மமக உட்பட 6 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறியானது நீடித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
அதே நேரம் திமுகவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மத்தியிலேயே பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்த அதிமுக, அடுத்தாக பாமகவையும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் இணைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்டசி, புரட்சி பாரதம் என கூடுதல் கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து வருகிறது. அந்த வகையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திறைமறைவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகளை கேட்பதால் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
இபிஎஸ் அமித்ஷா சந்திப்பு
இதன் காரணமாக தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கும் வகையில் கூட்டணி கட்சிகள் மற்றும் அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலோடு நேற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். இரவு பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. மேலும் சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பா.? அல்லது தாமரை இலை சின்னத்தை களம் இறக்குவதா.? ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 17 தொகுதிகளும், அமமுகவிற்கு 9 தொகுதிகளும் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறிய கட்சிகளுக்கு அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஒதுக்கப்படவுள்ள இடங்களில் அந்த கட்சிகளுக்கு என தனியாக தொகுதி ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னைக்கு திரும்பிய எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியல் களம் தொடர்பாக அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நாளைய தினம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வரவுள்ளார். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். அடுத்த 4 நாட்களில் தொகுதி பங்கீடு முடிக்கப்படும் எனவும் இபிஎஸ் தெரிவித்தார். தேர்தல் அறிக்கை ஒரு வார காலத்தில் வெளியிடப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதே நேரம் தவெகவுடன் எந்த வித கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லையெனவும் உறுதிபட கூறினார்.




















