EPS election campaign : அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
EPS election campaign : திமுக ஆட்சியில் மழை வந்ததா..? வெள்ளம் வந்ததா..? புயல் வந்ததா...? ஒன்றுமே இல்லையென தெரிவித்த எடப்பாடி பழனிசாமி,. ஆனால் அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தினோம். எல்லா மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

சூடு பிடிக்கும் தேர்தல்- இபிஎஸ் பிரச்சாரம்
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, ராயபுரம், துறைமுகம் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து திரு.விக.நகர் மற்றும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது தமிழ் மாநில பகுஜன் ஜமாஜ் கட்சித் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் மக்களிடம் நியாயம் கேட்டு வந்திருக்கிறார். பிஎஸ்பி மாநிலத் தலைவராக இருந்த அவரது கணவர் ஆம்ஸ்ட்ராங்க்கை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தது மட்டுமல்ல, அதற்கு நியாயம் கேட்டு வந்திருக்கிறார். அவருக்கு மக்கள் முழு ஆதரவு கொடுக்கவேண்டும்.
தோல்வி பயத்தில் திமுக
ஸ்டாலின் அவர்களும், உதயநிதி, கனிமொழி அவர்களும் தோல்வி பயத்தில் ஏதேதோ பேசுகிறார்கள். தோல்வி பயத்தால்தான் நம்மைப்பற்றி விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தினார்கள் என்பதைச் சொல்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து என்ன செய்வோம் என்று சொன்னால் பரவாயில்லை. அதைவிட்டு விட்டு திமுகவினர் எப்போது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோ, அன்று முதல் இன்று வரை என்னைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களைப் பற்றி பேசவில்லை, தமிழ்நாட்டைப் பற்றி பேசவில்லை.
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்.? ஊழல் செய்தார்கள். அதனால் தான் எதுவும் சொல்ல முடியவில்லை. திட்டங்களை செய்திருந்தால், மக்கள் முன் வந்து தைரியமாகச் சொல்வார்கள். ஆனால் சொல்வதற்கு எந்த திட்டமும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது கடும் வறட்சி. குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத ஒரு சூழல். சென்னை மாநகர மக்கள் குடிநீருக்காக போராடியபோது, அவர்கள் தாகத்தைத் தீர்க்க ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தாகம் தீர்த்தது அதிமுக அரசு.இரண்டாவது ஆண்டு புயல், வெள்ளம் வந்தது. டெல்டாவில் பல மாவட்டங்கள் பயிர்கள், வீடுகள் உடைமைகள் எல்லாம் சேதம். சிறப்பாக சமாளித்து ஆட்சி செய்தோம். அதற்கு பிறகு கொரோனா. எங்கேயாவது இப்படி கூட்டம் கூட முடிந்ததா..? முகம் பார்த்து பேசவே மாதங்கள் ஆனது. அப்படி இருந்த காலத்திலும் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். வீட்டிலேயே அத்தனை பேரும் தங்கி இருந்தோம், கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ் என்பதால், உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், கண்ணை இமை காப்பது போல் மக்களை காத்தது அதிமுக அரசு.
அதிமுக ஆட்சியில் தொடர்ந்த இயற்கை பேரிடர்
திமுக ஆட்சியில் மழை வந்ததா..? வெள்ளம் வந்ததா..? புயல் வந்ததா...? ஒன்றுமே இல்லை. கொரோனா காலத்தில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தினோம். எல்லா மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் செய்து கொடுத்தோம். அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட எல்லா மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சேமிப்புக் கிடங்கு ஏற்படுத்தி கொடுத்தோம். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தோம். அதனால் விலைமதிக்க முடியாத உயிர்களை காத்த அதிமுக அரசு என்ற பெருமை எங்களை வந்து சேர்ந்தது. இந்த ஆட்சியில் வறட்சி, புயல், வெள்ளம் எதுவும் வரவில்லை என்றாலும் சிறப்பான ஆட்சி கொடுக்க முடியவில்லை.
நகரத்தில் வீட்டுவரி உயர்த்தி விட்டார்கள், அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கட்டியிருந்தால் திமுக ஆட்சியில் 2000 ரூபாய் கட்ட வேண்டும். கடைக்கு அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் வரி கட்டினால், இப்போது 2500 ரூபாய் வரி கட்ட வேண்டும். 150 சதவீதம் உயர்த்தி விட்டார்கள். திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர்.
3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை. இதை இந்த அரசால் தடுக்க முடியவில்லை., ஏன் என்றால் திமுகவினர் தான் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள். அதனால் போலீஸால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை சென்னையில் கூட ஒரு இளைஞர் தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்று தகவல் கொடுத்த காரணத்தால், அவர் கொலை செய்யப்பட்டார். இது பற்றி நான் சட்டமன்றத்தில் பேசினேன். அதிமுக ஆட்சிக்கு வந்த பின் மூன்றே மாதத்தில் கஞ்சாவிற்பனை ஒழிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















