Election Commission orders : நெருங்கும் தேர்தல்.! தலைவர்களின் சிலைகளை மறைக்காதீங்க- அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பரபரப்பு உத்தரவு
TN ELECTION : தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சிலைகள் மறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

தொடங்கியது தேர்தல் திருவிழா
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அமலுக்கு வந்தது. திமுக அரசின் அதிகாரம் காபந்து அரசாக அதிகாரம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட முடியாத நிலையானது உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள், மறைந்த தலைவர்கள் படங்கள் மற்றும் அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படங்களும் அகற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட அறிஞர் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டது.
மறைந்த தலைவர்களின் சிலையை மறைக்காதீங்க
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று அரசியல் கட்சி தலைவர்களோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும் தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைத்த மறைப்புகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லையெனவும், அப்படி மறைத்திருந்தால் அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.




















