கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதிக்கு வீட்டுச் சிறையா? - அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி உறுதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கருணாநிதிக்கு வீட்டுச் சிறையா?
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் பேச வந்ததை ஸ்டாலின் உற்றுநோக்க வேண்டும்; உங்கள் கோபத்தை என் மீது காட்டாதீர்கள்; ஆ.ராசா மீது காட்டுங்கள். கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறியுள்ளது ஆ.ராசாதான். அதைத்தான் நான் சொன்னேன்; என் மீது கோபப்பட்டு என்ன பயன்?; ராசாவிடம் கேளுங்கள் அவர் சொல்வார். முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆ.ராசா ஆடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் எதில் முதன்மை?
நாட்டிலேயே கடன் வாங்கியதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது; அதுவே திமுக அரசின் சாதனை. ஊழல், மக்களை ஏமாற்றுவது, போதைப்பொருள் விற்பனையே திமுக அரசின் சாதனைகளாக உள்ளன. குடும்பக் கொள்ளையிலும் தமிழகம்தான் முதன்மை வகிக்கிறது. அமலாக்கத்துறை புகாரில் அமைச்சர் நேருவின் துறையில் ஊழல் வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுப்போம். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று மாதத்திலேயே போதைப்பொருள் முற்றிலுமாக தடுக்கப்படும். திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளை திருடுவதே திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது. இப்படிப்பட்ட அரசாங்கம் தேவையா?” எனக் கேள்வி எழுப்பினார்.




















