எங்கள் கூட்டணியில் விஜய்.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த அப்டேட்.. தொண்டர்கள் ஷாக்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து இபிஎஸ் பதிலளித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அப்படியான நிலையில் முதல்முறையாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடப் போவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் திமுகவை வீழ்த்த அக்கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கும் பணியும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில் சாணக்யா ஊடகத்தின் 7ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதன்படி, “தொடர் தோல்விகளை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி என்ற விமர்சனம் வைக்கப்படுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தோம். 2011ல் கருணாநிதி இருக்கும்போது கூட எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பின் கூட எதிர்க்கட்சியாக மக்களின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில் எத்தனை தோல்விகளை திமுக சந்தித்தது. இதனை ஊடகத்தினர் வெளிப்படுத்தவில்லை. இந்த 5 ஆண்டுகளில் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தகவலை திமுக பரப்பி வருகிறது. அதெற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார்.
உங்களுக்கும் அண்ணாமலைக்கும் என்ன பிரச்னை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி, எங்கள் இருவருக்கும் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. ஊடகத்தில் தான் அப்படியான தகவல் பரப்பப்படுகிறது. மார்ச் 17ம் தேதி கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணாமலை தான் தலைமை தாங்குகிறார். எங்களுக்குள் எந்தவித விரிசலும் கிடையாது.
திமுக கூட்டணியில் 25 கட்சிகள் உள்ளது. அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்கிறது என நினைக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, திமுக கூட்டணியில் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். வலிமை எங்கு இருக்கிறது. அங்கு கிடையாது. இன்னும் திமுக கூட்டணி முடிவாகவில்லை. எந்த கட்சி இருக்கும், எவை வெளியேறும் என்பது தெரியவில்லை. குறைந்த எண்ணிக்கை கொண்ட கட்சிகள் இருந்தாலும் எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் வருமா என்ற கேள்விக்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி, “நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். நாங்கள் இதுவரை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அப்படியென்றால் எப்படி வரும் சொல்லுங்கள். ஊடகத்தில் தான் அப்படியான தகவல்கள் பெரிதுப்படுத்துகின்றன. தவெகவுடன் அதிமுக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















