EPS slams DMDK: "அங்கீகாரமே இல்லை.. இத்தனை சீட் கொடுத்துள்ளார்கள்.. தேமுதிகவை அட்டாக் செய்த இபிஎஸ்
அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அதிக இடங்களை வழங்கி 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தகுந்த அந்தஸ்தை கொடுக்காத கட்சி திமுக என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மயிலாப்பூர் தொகுதியில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைமையிலான கூட்டணியை "கட்டாயக் கூட்டணி" என்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அதிக இடங்களை வழங்கி 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தகுந்த அந்தஸ்தை கொடுக்காத கட்சி திமுக என விமர்சித்துள்ளார்
அவர் பேசியதாவது “நான் ஏற்கனவே 193 தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தோம், அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலாக மயிலாப்பூரில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இறைவன் அருளால் அதிமுக தலைமையிலான தே.ஜகூட்டணி 210 இடங்களில் வென்று, அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.
திமுகவின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது. நமது கூட்டணிக் கட்சிகளை மூன்று நாட்களுக்கு முன்பு நமது கட்சி அலுவலகத்திற்கு அழைத்தோம். அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை அறிவித்தோம். அடுத்த நாள் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். நம் தேர்தல் அறிக்கை மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் அனைத்து மக்களும் நமக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
அதேபோல் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த தொகுதியில் எந்தெந்தக் கட்சி போட்டியிடும் என்று பேசி முடிவெடுத்து இன்று அறிவித்துவிட்டோம். அதுமட்டுமல்ல, அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருக்கிறோம். இதை முதன்முதலில் அறிவித்தது அதிமுக தான். 23 வேட்பாளர் அடங்கிய பட்டியலை அறிவித்தோம், இன்னும் ஓரிரு நாட்களில் மீதமும் அறிவிக்கப்படும். ஆனால், திமுகவின் நிலை என்ன? திமுக கூட்டணி அமைப்பதற்கு 20 நாட்களாகப் போராடினார்கள். ஒவ்வொரு கட்சியும் பதறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் போராடியே தொகுதி பெறும் அவல நிலை உள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் அடிமையாக உள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணித் தலைவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.
திமுகவில் 10 ஆண்டுகாலம் பயணிக்கிறோம் என்கிறார்கள். அதாவது, 10 ஆண்டுகள் அடிமையாக இருக்கிறார்கள். அதனால் தான் 2021 தேர்தலை விட குறைவான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதை திமுக கூட்டணிக் கட்சியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது திமுகவிடம் ஆட்சி இருக்கும்போது, அவர்களை புகழ்ந்து பாட உங்களை பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் தேர்தலில் உங்களுக்குத் தகுந்த அந்தஸ்து கொடுக்காத கட்சி திமுக.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராடிப் பார்த்தார்கள், நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிப்பார்த்தார்கள். ஆனால் கடந்த தேர்தலை விட குறைவான தொகுதி பெற்றுள்ளனர். விசிகவும் எவ்வளவோ போராடி 8 இடங்களை மட்டுமே பெற்றனர். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிகம் இடம், அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு குறைந்த தொகுதி. இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது என்றார்
ட்ரெண்டிங் செய்திகள்




















