கோவைக்குள் நுழைய செந்தில் பாலாஜிக்கு தடையா? 'செக்' வைக்கும் இபிஎஸ் - பரபரக்கும் கொங்கு அரசியல் களம்
சொந்த கட்சியின் சின்னத்தையே மறந்தவர் மக்களை எப்படி காப்பார்?. முதலமைச்சராக மக்கள் பிரச்னைகள் எதையும் ஸ்டாலின் தீர்க்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

செந்தில்பாலாஜி வென்றுவிட்டால் கோவை மாவட்டத்தில் நிலை படுமோசமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு ஞாபகம் மறதி அதிகம்
கோவை மேட்டுப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் வேலுசாமியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்கின்றன. தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். திமுக நடத்திய கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. மேட்டுப்பாளையம் மக்களுக்கு தெரியும் விஷயம் கூட முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு அதிக பாலங்களை கட்டிக் கொடுத்தோம். போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது தமிழ்நாடு; குற்றங்கள் அதிகரித்ததற்கு காரணம் போதைப்பொருள்தான். குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு சென்றன. தங்கம் விலை நிலவரம் போல் குற்றச்சம்பவங்களின் நிலவரம் வெளியாகிறது. 5 ஆண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சாதனை செய்தார்? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஞாபகம் மறதி அதிகம் உள்ளது; திமுக வேட்பாளரின் சின்னத்தையே மறந்துவிட்டார். சொந்த கட்சியின் சின்னத்தையே மறந்தவர் மக்களை எப்படி காப்பார்?. முதலமைச்சராக மக்கள் பிரச்னைகள் எதையும் ஸ்டாலின் தீர்க்கவில்லை. அதிமுக ஆட்சி குறித்து பொய்யான தகவல்களை ஸ்டாலின் தெரிவிக்கிறார்.
செந்தில் பாலாஜியை கோவைக்குள் அனுமதிக்க கூடாது
செந்தில்பாலாஜி வென்றுவிட்டால் கோவை மாவட்டத்தின் நிலை படுமோசமாகிவிடும். டிரான்ஸ்பராகி செந்தில்பாலாஜி கோவைக்கு வந்துள்ளார்; அவரை இந்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. தவறான வழியில் ஒருவரை வீழ்த்துவதில் கை தேர்ந்தவர் செந்தில் பாலாஜி. நல்லது செய்வதற்காக மற்றவர்களுக்கு மூளை இருக்கிறது என்றால் செந்தில்பாலாஜிக்கு மட்டும் தீமைய் செய்யவே மூளை உள்ளது. கரூரை காலியாக்கிவிட்டு கோவைக்கு வந்துள்ளார் செந்தில்பாலாஜி” என்று பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















