விஜய் ஆதரவு பெற்ற வேட்பாளர்... ஆட்டம் காணுமா அதிமுக-வின் கோட்டை? – பரபரக்கும் எடப்பாடி தொகுதி!
எடப்பாடியில் இபிஎஸ் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார் என்று விஜய் ஆதரவு பெற்ற எடப்பாடி தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் கூறினார்.

தளபதி விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது பொதுமக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது; நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என விஜய் ஆதரவு பெற்ற எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தவெக முன்னாள் நிர்வாகியும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து சேலம் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரேம்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேம்குமார், ஆரம்ப காலத்தில் இருந்து தலைவரின் ரசிகராக கிளை ரசிகர் மன்றத்தில் இருந்தேன். இன்றைக்கு தன்னை அழைத்து தளபதி ஆதரவு தெரிவித்திருப்பது மிகப்பெரிய எழுச்சி. பொதுமக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார். ஏற்கனவே தொலைக்காட்சி பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வந்தேன் ; தற்போது விஜய் ஆதரவு பெற்ற நிலையில் தவெக நிர்வாகிகள் தனக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். தலைவர் விஜய் நேரில் சந்தித்தபோது சிறப்பாக செயல்பட வேண்டும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று தெரிவித்து வாழ்த்தினார்” எனக் கூறினார்.
முன்னதாக, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பாக சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு கொடுக்கும்படி, தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமாரை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















