EPS: ''2011-ல் எதிர்க்கட்சியாக கூட வராத திமுக; 10 ஆண்டுகள் தோல்விதான்''- விளாசிய ஈபிஎஸ்
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும் தமிழக மக்களுக்கும் நடக்கும் தேர்தல், இந்த சட்டப்பேரவைத் தேர்தல்- சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் பொதுமக்கள் முடிவு கட்டுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இறுதிக்கட்ட பிரசார பொதுக் கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது.
ஒரு குடும்பம் பிழைக்க 8 கோடி மக்களை சுரண்டுவதா?
’’தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும் தமிழக மக்களுக்கும் நடக்கும் தேர்தல், இந்த சட்டப்பேரவைத் தேர்தலாகும். ஒரு குடும்பம் பிழைக்க 8 கோடி மக்களை சுரண்டுகிறார்கள். இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை பொருட்கள் பல்வேறு வடிவங்களில் தங்கு தடையின்றி விற்பனையாகிறது. கஞ்சா விற்பனை அமோகமாக இருக்கிறது. திமுக அரசு அதைத் தடுக்க முன்வர வில்லை.
ஏனென்றால் கஞ்சா விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் துணை நிற்கின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சீரழிகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். கஞ்சா போதை ஆசாமிகளால் சிறுமிகள், பெண்கள் மற்றும் மூதாட்டிகள் பாதிக்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டது. இதை சரிசெய்ய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்.
திமுக அரசு மேல்முறையீடு
அண்ணா நகர் சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களை காப்பாற்றவே இந்த அளவுக்கு செய்கின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுககளுக்கு சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் செல்கின்றனர்.
குற்றவாளிகளுக்கு துணை போகின்ற அரசாக திமுக அரசு உள்ளது. புது புதிதாக வித்தைகள் கண்டுபிடித்து திமுக அமைச்சர்கள் ஊழல் செய்கின்றனர் . எப்படியெல்லாம் ஊழல் செய்ய வேண்டும் என திட்டமிட்டு கொள்ளையடிக்கின்றனர். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. எந்தெந்த துறையில் எப்படி கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கிலேயே திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
பணம், நகையெல்லாம் திருடுவது போல திமுக ஆட்சியில் திமுக எம்எல்ஏ கிட்னி திருட்டில் ஈடுபடுகிறார். இதெல்லாம் ஒரு ஆட்சியா.. மனிதாபிமானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் ஏழைகளை ஏமாற்றி கிட்னி, கல்லீரல் திருடுகின்றனர். இதுபோன்ற ஆட்சி தேவையா என மக்கள் முடிவெடுக்க வேண்டும். கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை
மக்கள் விரோத ஆட்சியை மக்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர் போராட்டம் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2011-ல் திமுகவால் எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை.
2011 முதல் 2021 முதல் அத்தனை தேர்தல்களிலும் திமுக தோல்வியடைந்தது. இதுபற்றி எதுவுமே ஸ்டாலினுக்கு தெரியவில்லை. 2021-ல் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக வந்தது. 2021-ல் அமைந்த அதே கட்சிகள்தான் இப்போதும் திமுகவில் உள்ளன. புதிதாக ஒரு கட்சிதான் போய் சேர்ந்துள்ளது. அங்கு போய் நமக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி.
நெசவாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அதிமுக ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 350 கோடி மானியம் வழங்கப்பட்டது. பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர் ஓய்வூதியம் ஆயிரத்தில் இருந்து 2500 ஆக உயர்த்தப்படும்’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















