Udhayanidhi Stalin: “அண்ணாவே இவரை கேட்டு தான் திமுகவை ஆரம்பிச்சாரு” - விஜயை கலாய்த்த உதயநிதி!
அண்ணா ஆரம்பித்த திமுக, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் தற்போது இருப்பவர்களை குறிப்பிட்டு அடுத்தவர்கள் அட்ரஸில் இருந்துக் கொண்டு அரசியல்வாதிகள் என சொல்கிறார்கள் என தவெக தலைவர் விஜய் பேசியிருந்தார்.

சேலத்தில் தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் திமுகவை விமர்சித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக vs தவெக
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தலுக்கான தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியுடனும், நாம் தமிழர் கட்சி தனித்தும் கடந்த கால தேர்தல்களை சந்தித்து வந்தது. அப்படியான நிலையில் இந்த முறை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜய் திமுக அரசியல் எதிரி என கூறி ஒவ்வொரு மேடையிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி எனவும், இந்த தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி எனவும் குறிப்பிட்டு வருகிறார். இதற்கு திமுக தரப்பில் சரமாரியாக பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
விஜய் vs உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில் பிப்ரவரி 13ம் தேதி சேலம் மாவட்டம் சீமநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், வழக்கம்போல திமுகவை சரமாரியாக விமர்சிக்க தொடங்கினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடங்கி பெண்கள் பாதுகாப்பு வரை அனைத்தும் அவுட் ஆஃப் கண்ட்ரோலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல் அண்ணா ஆரம்பித்த திமுக, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் தற்போது இருப்பவர்களை குறிப்பிட்டு அடுத்தவர்கள் அட்ரஸில் இருந்துக் கொண்டு அரசியல்வாதிகள் என சொல்கிறார்கள். என்னை மாதிரி தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவிகிதம் ஓட்டு வாங்கி காட்ட முடியுமா? என சவால் விடுத்தார். இதற்கிடையில் சேலம் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சென்ற வெளிமாநில தொழிலாளி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது மிகப்பெரிய அளவில் தவெகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், “சேலத்தில் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்து விட்டாரே?” என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “நீங்கள் அதை சரியாக சம்பந்தப்பவர்களிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார். தொடர்ந்து, “என்னால் தான் திமுக அரசு மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியிருக்கிறது என சொல்கிறாரே?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “அண்ணாவே இவரைக் கேட்டு தான் திமுகவை ஆரம்பிச்சாரு” என தனது ஸ்டைலில் பதில் சொல்லி உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.





















