“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
"எந்த வேலையை கொடுத்தாலும் எதிர்பார்ப்புக்கு மேல் செய்பவர்” என்று செந்தில் பாலாஜியை புகழ்ந்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜிதான்” என கோவை பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர்
பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகையில், “2021ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவை. கோவை என்னுடைய ஊர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒன்றிப்போய் இருக்கிறென். செந்தில் பாலஜி என்றால் செயல் வீரர் என்று அர்த்தம். நினைத்ததை சாதித்துக் காட்டுபவர். அதனால்தான் கோவையில் நிற்கிறார். எந்த வேலையை கொடுத்தாலும் எதிர்பார்ப்புக்கு மேல் செய்பவர்” என்று செந்தில் பாலாஜியை புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கோவை மக்கள் கொடுத்துள்ளீர்கள். 2026 தேர்தலிலும் இதேபோன்ற வெற்றியை கொடுக்க வேண்டும். கலவரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என செயல்படும் கட்சிக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும்.
மோடி சென்னைக்கு வந்தாலே நமக்கு வெற்றி
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். நாம் 40க்கு 40 வென்றோம். இப்பவும் அடிச்சு சொல்றேன், அவர் வந்தால் நமது 200 தொகுதி இலக்கு உறுதியாகிவிடும். போதிய மக்கள் தொகை இல்லை எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்துவிட்டு, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, ஆக்ரா நகரில் ஆளில்லாமல் மெட்ரோவை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக
மத்திய பட்ஜெட் தயாரிக்கும்போது தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிடுவார்கள். தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டை மொத்தமாக பழிவாங்குவதால் வாக்குச்சாவடி செல்லும்போது மக்களுக்கு பாஜகவின் ஞாபகம் வருவதில்லை. தமிழரை குறை கூறி பீகாரில் பேசியதை, தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பேசுவாரா?
கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள்
கோவையில் செம்மொழிப்பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம் அமைத்துள்ளோம். ஜி.டி.நாயுடு மேம்பாலம் இன்னும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்கப்படவுள்ளது. விசைத்தறி, சிறு தொழில்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் முதல் நிகழ்ச்சியாக இதன் திறப்பு விழாவில் பங்கேற்பேன்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.




















