(Source: Matrize | *Exit polls are projections; official results on May 4, 2026)
Elections 2026: புதுச்சேரி, அசாம், கேரளமில் சரித்திரம்- இதுவரை இல்லாத உச்சத்தில் வாக்குப்பதிவு ஏன்? காரணம் என்ன?
Assembly Elections 2026: புதுச்சேரி மட்டுமின்றி அசாம் மற்றும் கேரளா மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், இதுவரை இல்லாத அளவில் வாக்குப்பதிவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Assembly Elections 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 91 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் வாக்குப்பதிவு
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக தென்னிந்தியாவில் உள்ள கேரளா மற்றும் புதுச்சேரியிலும், வட இந்தியாவைச் சேர்ந்த அசாமிலும் உள்ள அத்தனை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அப்படி நடந்த இரண்டு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரியில் நடந்த சரித்திரம்
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முன்பாக வந்த அனைவருமே வரிசையில் நிற்க அனுமதிக்கப்பட்டு, ஜனநாயக கடமையை செய்திட வாய்ப்பினை பெற்றனர். இதன் விளைவாக 89.8 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். அதாவது மாநிலத்தில் வாக்களிக்க தகுதி பெற்று இருந்த, 9 லட்சத்து 44 ஆயிரம் பேரில் சுமார் 8 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பதிவான 83.28 சதவிகிதத்தை விட அதிகம். அதோடு,கடந்த 1964ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வாக்கு சதவிகிதமும் இதுவாகும். 2011ம் ஆண்டு தேர்தலில் பதிவான 86.19 சதவிகிதம் என்பதே முந்தைய அதிகபட்ச வாக்குப்பதிவாகும். இங்கு காங்கிரஸ் - என்.ஆர். காங்கிரஸ் - தவெக என மும்முனைப்போட்டி நிலவுகிறது.

அசாம் வாக்குப்பதிவிலும் புதிய சாதனை
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 85.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு பதிவான 82.04 சதவிகிதம் என்ற சாதனையை முறியடித்து, அந்த மாநில சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவான வாக்கு சதவிகிதமாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பதிவான 84.67 சதவிகிதம் என்பது இங்கு முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் உச்சம் தொட்ட வாக்குப்பதிவு
கேரளம் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளில் சுமார் 78.27 சதவிகித வாக்குகள் பதிவானதாக, இதுவரையிலான தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இங்கு 74.06 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், மாநில சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் கடந்த 1987ம் ஆண்டு பதிவான 80.54 சதவிகிதம் என்பதே அதிகபட்ச வாக்குப்பதிவாக உள்ளது. நடப்பு தேர்தலுக்கான இறுதி தரவுகள் வெளியாகும்போது, பழைய சாதனை முறியடிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகப்படியான வாக்குப்பதிவு எப்படி? ஏன்?
கேரளா மற்றும் அசாமில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே கட்சியே ஆண்டு வருகிறது. அவர்களின் மீதுள்ள அதிருப்தியையே பொதுமக்கள் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. புதுச்சேரியில் முதல்முறையாக விஜய் தலைமையிலான தவெகவும் போட்டியிடுவதால், இளைஞர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. அதேநேரம், மத்திய அரசு முன்னெடுத்த சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியலும், கூடுதல் வாக்குப்பதிவிற்கு பெரும்பாங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது. போலி வாக்காளர்கள், இரட்டைப்பதிவுகள் மற்றும் மரணமடைந்தவர்களின் விவரங்கள் நீக்கப்பட்டதால், தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வாக்குப்பதிவு சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக பாஜக தரப்பினர் பேசி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















