O Panneer Selvam: ‘கூச்சமே இல்லையா?.. அம்மா எல்லாம் சும்மாவா?’ - திமுகவில் ஓபிஎஸ்.. விளாசிய அதிமுக!
எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அறியப்பட்டார்.தற்போது அவர் திமுகவில் இணைந்திருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ள இந்த நிகழ்வை அதிமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “ ஓ.பன்னீர்செல்வம் அவர்களே.. கூச்சமே இல்லையா.. "ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.
ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
இரத்தத்தின் இரத்தமான அதிமுக தொண்டர்கள்!
பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே?! "உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்! இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும். பின்குறிப்பு என தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!” என காட்டமாக பதிவிட்டுள்ளது.
அரசியல் களத்தில் மாற்றம்
எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அறியப்பட்டார். குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்று ஜெயலலிதா சிறை சென்ற இருமுறையும், அவர் மறைவுக்குப் பின் ஒரு முறையும் என 3 முறை அதிமுக சார்பில் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கிய அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் பல கட்டமாக போராடி பார்த்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் மீண்டும் தன்னை அதிமுகவில் சேர்க்கக்கோரி பலமுறை தூது அனுப்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கடைசி வரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் அவர் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.





















