அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? - எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?
அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்ற விவரங்கள் குறித்த அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் என இபிஎஸ் தகவல்.

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்விக்கு இன்று இரவுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள பாமக, பாஜக, அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு உடன்பாட்டிற்கான ஒப்பந்தம் நடைபெற்றது. இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி?
எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், “பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக எத்தனை இடங்களில் போட்டி என்று இன்று இரவுக்குள் அறிவிப்பு வெளியாகும். மற்ற கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டபின் அதிமுகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு என சொல்லப்படும். 210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும்.
டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார்
நாங்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். டெல்லி சென்றாலே திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்புவது திமுகவினரின் வாடிக்கையாக இருக்கிறது. எங்கள் கருத்துகளை பரிமாறவே டெல்லி செல்கிறோம். திமுக எம்பி கனிமொழி எதற்காக டெல்லி சென்றார்?. எதற்காக ராகுல் காந்தியை சந்தித்தார்?. திமுக கூட்டனியில் மார்க்சிஸ்ட், விசிக தொகுதி பங்கீடு உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை. நாங்கள்காலையில் பேச்சுவார்த்தை நடத்தி மாலையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். திமுக கூட்டணி 20 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றார்.
மேலும், தான் டெல்லி சென்றது மாநிலங்களவைக்கு சென்று கையெழுத்திடுவதற்குதான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.




















