TN Election 2026 : தமிழகத்தில் 1,212 கோடி பறிமுதல்.! அரசியல் கட்சிகளை அலற விட்ட தேர்தல் ஆணையம்
TN Election 2026 : ரொக்கப்பணமாக 169.85 கோடி ரூபாயும், 2.95 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும், 82.73 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும், 650 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்றோடு பிரச்சாரம் ஓய்வு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் வீதி வீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
பல இடங்களில் வாகன சோதனைகளும் நடைபெற்றது. இதில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்குவர்.
தயார் நிலையில் வாக்குச்சாவடி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளும், 33,211 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வணிகம், வர்த்தகம், தொழிற்சாலை அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் முழுவதும், அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எல்லைப் பகுதிகளில் இன்று (21.04.2026) முதல் 23.04.2026 வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான 04.05.2026 அன்றும் 'மது விற்பனை இல்லாத நாட்களாக' அறிவிக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு பணி தீவிரம்
தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 136 பொதுப்பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 150 செலவினப் பார்வையாளர்களையும் நியமித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக, 83875 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 40427 காவல்துறை அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 300 கம்பெனிகளை பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் நியானமான தேர்தலை நடத்துவதற்காக நியமித்துள்ளது. அந்த கம்பெனிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
1,212 கோடி ரூபாய் பறிமுதல்
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 20.04.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணமாக 169.85 கோடி ரூபாயும், 2.95 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும், 82.73 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும், 650 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற உலோக பொருட்களும்,
306 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 1,212 கோடி என கூறப்பட்டுள்ளது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் சுமார் ரூ. 495 கோடி தொகையானது, முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறோ அல்லது அலைக்கழிப்போ இன்றி விடுவிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















