"எங்களுக்கு மட்டும் நிதி இல்லையா?" திமுக அறக்கட்டளை நிதியையாவது கொடுங்கள் - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..
37 லட்சம் பேருக்குச் சிறப்பு நிதி வழங்க நிதி இருக்கும்போது, ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய மட்டும் நிதி இல்லையா? என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்குக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

"தமிழகத்தில் 37 லட்சம் பேருக்குச் சிறப்பு நிதி வழங்க நிதி இருக்கும்போது, 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய மட்டும் நிதி இல்லையா?" எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில அரசுக்குக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் 181-வது வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் குடும்பத்தினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்குறுதி 181: 15 ஆண்டுகாலக் காத்திருப்பு
இது குறித்துத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கடந்த 15 ஆண்டுகளாகக் கேள்விக்குறியாகவே உள்ளது. 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போதும், 'திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்' என தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். குறிப்பாக, திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 181-இல் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடியவுள்ள நிலையிலும், இன்றுவரை அந்த வாக்குறுதி காகித அளவிலேயே உள்ளது."
அரசாணை வெளியிடுவதில் தாமதம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
கடந்த ஜனவரி மாதம் ஆசிரியர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, ஜனவரி 14-ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகளை அரசு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்புகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஊதிய உயர்வு: ரூ. 2,500 சம்பள உயர்வு மற்றும் மே மாத விடுமுறைக்கால ஊதியம் ரூ. 10,000 குறித்த அறிவிப்பு வெளியாகி 48 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 3-ஆம் தேதிதான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* காப்பீடு திட்டம்: 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சம் மருத்துவக் காப்பீடு திட்டம், அறிவிக்கப்பட்டு 32 மாதங்கள் கடந்தும் இன்னும் அரசாணையாக வடிவம் பெறவில்லை.
*சிறப்பு மதிப்பெண்: காலிப்பணியிடத் தேர்வுகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு மதிப்பெண் குறித்த அரசாணையும் நிலுவையில் உள்ளது.
"நாங்கள் கேட்டது பணிநிரந்தரம் மட்டுமே"
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், "எந்த ஒரு பகுதிநேர ஆசிரியரும் அரசிடம் பிச்சை கேட்கவில்லை. நாங்கள் ரூ. 2,500 உயர்வையோ அல்லது சிறப்பு மதிப்பெண்ணையோ கோரிக்கையாக வைக்கவில்லை. எங்களது ஒரே கோரிக்கை 'பணிநிரந்தரம்' மட்டுமே. ஆனால், ஆசிரியர்கள் கேட்டதை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் அப்பட்டமான ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார். 11,773 குடும்பங்களின் வாழ்வாதாரத்தோடு அரசு விளையாடக் கூடாது," என ஆவேசமாகத் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடா?
அரசு பல்வேறு தரப்பினருக்கு நிதி ஒதுக்குவதைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தங்களுக்கு மட்டும் நிதி இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
"மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ. 6,550 கோடி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி, மீனவர்களுக்கு ரூ. 8,000 உதவித்தொகை மற்றும் தேயிலை விவசாயிகளுக்கு ஆதார விலை எனப் பல கோடி ரூபாய்களை முதல்வர் ஒதுக்குகிறார். இதற்கு எல்லாம் நிதி இருக்கும்போது, மாதம் வெறும் 20 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரத்திற்கு மட்டும் நிதி இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக அறக்கட்டளைக்குக் கோரிக்கை
அடுத்த சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், முதல்வர் உடனடியாக மனது வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். "அரசு நிதியில் சிக்கல் இருந்தால், திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய பாவத்திற்காக, திமுக அறக்கட்டளை நிதியிலிருந்து ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி செய்ய வேண்டும்," என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காலமுறை ஊதியம் வழங்க இப்போதே முதல்வர் ஆணையிட வேண்டும் என்றும், தவறினால் 11,773 ஆசிரியர் குடும்பங்களின் கண்டனக் குரல் வரவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
























