TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026: விஜய் அரசின் முதல் பட்ஜெட்: கல்விக்கு நிதி குறைப்பு! பள்ளிக் கல்வி, உயர் கல்விக்கு பெரும் பின்னடைவு?

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிக் கல்வித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கடந்த கல்வியாண்டில் 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2026-27ஆம் நிதியாண்டிற்கு 44,527 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு. கடந்த ஆண்டை விட 2,240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு சரிந்து உள்ளது.
50 ஆயிரம் கோடியைத் தாண்டாத பட்ஜெட்
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 48,534 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 50000 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டைவிட, 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறைக்கும் இடி
ஆண்டாண்டு காலமாகவே உயர் கல்வித் துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பது பேராசிரியர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆய்வுத் துறையில் போதிய கவனம் செலுத்துவதற்கு நிதி இல்லை என்பது பெரிய குறைபாடாக உள்ளது.
கடந்த நிதியாண்டில் 8,494 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த 2026- 27ஆம் நிதியாண்டில் 8,393 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 101 கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் பட்ஜெட்டின் நிதி அதிகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய சூழலில், நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளின் திறன் குறையும் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அன்பில் மகேஸ் கண்டனம்
இதுகுறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது இன்று வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரிய வருகிறது.
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்’’ என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























