அண்ணா பல்கலை. மேம்பாட்டுக்காக ரூ.1,380 கோடி நிதி; தமிழ்நாடு அரசின் மாபெரும் திட்டம்! எதற்கெல்லாம்?
அண்ணா பல்கலை.யை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக 1,380 கோடி ரூபாய் செலவிலான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப் படிப்புடன், தொழில்நுட்பப் பயிற்சியும் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வரை இடைநில்லாமல் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிட, தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
இந்தக் குறிக்கோள்களை எட்டிட கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்தம் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு, கல்வி உதவித் தொகைத் திட்டம் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
கல்லூரி மாணவர்கள், தம் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக, 2.172 கோடி ரூபாய் செலவில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை 6,75,888 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக 1380 கோடி ரூபாய் செலவிலான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.1,380 கோடி ஒதுக்கீடு பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தப்படும்:
- ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை நவீனமயமாக்குதல்
- டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
- வளாக வசதிகளை மேம்படுத்துதல்
- புதுமை மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல்
- சர்வதேச கல்வி கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல்
இந்த முயற்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தரவரிசை மற்றும் கல்வி நற்பெயரை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 909 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவாக மாறிவரும் வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் 11 அரசுப் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, அதி நவீன உற்பத்தித் திறன் முதலான 8 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
























