ஓய்வு நாளில் சஸ்பெண்ட்: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் மீது அதிரடி நடவடிக்கை! காரணம் என்ன?
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ், ஓய்வு பெற இருந்த கடைசி நாளில் வழக்கு விசாரணை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆன வேல்ராஜ், தான் ஓய்வு பெற இருந்த கடைசி நாளான நேற்று (ஜூலை 31) சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றியவர் வேல்ராஜ். அவரது துணை வேந்தர் பதவிக்காலம் கடந்த 2024ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆனாலும் அவர் ஓய்வு பெறும் வயது நிறைவடையாத காரணத்தால் நேற்று வரை மீண்டும் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
ஜூலை 31ஆம் தேதி வரை அவர் பணிக் காலம் இருந்த நிலையில், நேற்று ஓய்வு பெற கடைசி நாளாக இருந்தது. இந்த நிலையில் அவர் மீது நிலுவையில் இருந்த பழைய வழக்குகளை காரணம் காட்டி உயர் கல்வித்துறை அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
என்ன வழக்கு?
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் இருந்தது. அந்தப் புகாரில் வேல்ராஜுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது.
அதேபோல துணை வேந்தராவதற்கு முன்பாக, இயந்திரவியல் துறையின் கீழ், அங்குள்ள எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார். அங்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை பணி இடை நீக்கம் செய்ய சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை காரணமாக அவர் ஓய்வு பெற இருந்த கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விதிகளை மீறிய உயர் கல்வித்துறை?
ஏற்கனவே ஒருவர் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில், விதிகளை மீறி உயர் கல்வித்துறை செயல்பட்டதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.






















