Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
தேர்வை மிகச் சிறப்பாக எழுதிய நிகிதா என்னும் மாணவி, முடிவுகள் வெளியாவதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவி ஒருவர், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்பாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி தனது இறுதித் தேர்வில் 93.88 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில இடைநிலைக் கல்வி வாரியம் அண்மையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது முடிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஒரு குடும்பம் மட்டும் தங்கள் மகளின் மதிப்பெண் சான்றிதழைக் கையில் ஏந்தியபடி, மீளாத் துயரத்தில் மூழ்கியிருந்தது.
நடந்தது என்ன?
தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் தேர்வை மிகச் சிறப்பாக எழுதிய நிகிதா என்னும் மாணவி, முடிவுகள் வெளியாவதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். முடிவுகள் வெளியான பிறகு, அந்த மாணவி 93.88 சதவீத மதிப்பெண்களைப் பெற்றது தெரியவந்தது.
இது குறித்துப் பேசிய அவரது குடும்பத்தினர், "எங்கள் மகள் நிகிதா எப்போதுமே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். எதிர்காலத்தில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற பெரிய கனவுகளோடு இரவும் பகலும் கண் விழித்துப் படித்தாள். அவள் நிச்சயமாக அதிக மதிப்பெண்கள் பெறுவாள் என நாங்கள் உறுதியாக நம்பினோம்.
ஆனால், அவளது உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்த இந்த நாளில், அந்த வெற்றியைக் கொண்டாட அவள் எங்களுடன் உயிருடன் இல்லை" எனக் கதறி அழுதனர்.
என்ன காரணம்?
நிகிதாவின் பெற்றோர் தினக் கூலியினர். இவர் ராஜஸ்தானில் உள்ள ராவ்லா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நிகிதா கல்லீரல் அழற்சி மற்றும் டயாபடீஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாய் பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது.
























