IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
தாயும் மகனும் ஒரே நாளில், ஒரே பாடப்பிரிவில் ஐஐடியில் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, கல்வியின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஐஐடி சென்னை வரலாற்றில் சிறப்பான நிகழ்வாக, 45 வயதுடைய தாயும் அவரது 21 வயது மகனும் ஒரே மேடையில் ஒன்றாகப் பட்டம் பெற்றுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஐஐடி சென்னையின் பட்டமளிப்பு விழாவில், குஜராத்தைச் சேர்ந்த ஜிகிஷா டெய்லர் (45) மற்றும் அவரது மகன் ஆதித்யா கபாடியா (21) ஆகிய இருவரும் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பாடப்பிரிவில் பி.எஸ் பட்டத்தை ஒன்றாகப் பெற்றுள்ளனர்.
ஐஐடி சென்னையில் ஆன்லைன் படிப்பு
16 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றிய ஜிகிஷாம் 2019-ல் குடும்ப சூழல் காரணமாக வேலையை விட்டு நின்றார். 2022-ல் மகனின் ஊக்கம் காரணமாக ஐஐடி சென்னையில் ஆன்லைன் படிப்பில் சேர்ந்தார்.
அவரின் மகன் ஆதித்யாவும் பள்ளிப் படிப்பை முடித்தபிறகு 2021ஆம் ஆண்டில் ஐஐடி சென்னையில், பிஎஸ்சி ஆன்லைன் படிப்பில் சேர்ந்தார். கோவிட் காலம் என்பதால், ரெகுலர் படிப்பு என்றாலும் ஆன்லைனிலேயே இருந்திருக்கும் என்னும் ஆதித்யா, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இருக்கும் ஆர்வம் காரணமாக அந்தப் படிப்பை தேர்வு செய்ததாகத் தெரிவித்தார்.
சவாலான சூழலில் வெற்றிகரமாக முடித்த ஜிகிஷா
ஒருபக்கம் பணி, மறுபக்கம் குடும்பப் பொறுப்புகள் என இரண்டையும் கவனித்துக்கொண்டே இந்த சவாலான படிப்பை அவர் வெற்றிகரமாகப் படித்து முடித்துள்ளார்.
படிப்பின் போது இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டதாகவும், கடினமான அசைன்மென்ட்கள் மற்றும் தேர்வுகளுக்கு ஒன்றாகத் தயாரானதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்துப் பேசிய பத்மினி, "எனது மகனுடன் இணைந்து ஐஐடி போன்ற நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனத்தில் ஒரே மேடையில் பட்டம் பெறுவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு வயது ஒருபோதும் தடையல்ல என்பதை இது காட்டுகிறது" என்று குறிப்பிட்டார்.
அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்
தாயும் மகனும் ஒரே நாளில், ஒரே பாடப்பிரிவில் ஐஐடியில் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, கல்வியின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























