என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்களுக்குப் பிஸ்கட் வழங்கிய நிர்வாகம்.

விளாத்திகுளம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட் வழங்கப்பட்ட செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கே, நேற்று (ஜூன் 20) காலை வழக்கம்போல உணவு கொடுக்கப்பட்டது. அப்போது 40 குழந்தைகளுக்கு உணவு போதவில்லை.
உணவுக்கு பதில் பிஸ்கட்
இதனால் காலை உணவு கிடைக்காமல் குழந்தைகள் பசியில் துடித்தனர். இந்த நிலையில், அந்த 40 குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகாரினைத் தொடர்ந்து கோவில்பட்டி தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் செல்வி வினோதா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்து, அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக ஜோசப் விஜய் அரசு செயல்பட்டு வருகிறது.
விசித்திரமான விளக்கம் எதற்கு?
மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்கத் திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறே ஆகும்.
எனவே, தமிழக முதல்வர் விஜய் விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தப் பள்ளியிலும் இதுபோன்ற அவலநிலை ஏற்படக்கூடாது
இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என ஜோசப் விஜய் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























