வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
இந்த விவகாரத்தில் முந்தைய திமுக அரசு தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை எந்தவித மேல்முறையீடு செய்யாமல் விட்டதால் தான் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி , தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 தனியார் மருத்துவ கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டிலேயே சுமார் 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இடஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க நினைக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணம் கேள்விக்குறியாகி உள்ளது. இதன்பின்னணியில் முந்தைய திமுக அரசு அலட்சியமாக செயல்பட்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த 4 மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் மருத்துவ சேவை தரமானதாக உள்ளது. இவ்வாறு தனியார் மருத்துவக்கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதால் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. கிராமப்புற மக்களுக்கு பெரிதும் உதவக்கூடிய 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடும் கிடைக்காது.
அதுமட்டுமல்லாமல் அரசு நிர்ணயிக்கக்கூடிய கட்டணத்தை பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. கடந்த 2 நாட்கள் முன்பு தான் இந்த விஷயம் தெரிய வந்தது. 4 மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு அரசை அணுகாமலேயே இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் தவெக அரசு இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்து பெற்றதை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
எப்படி மருத்துவக்கல்லூரி தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் கொடுக்கப்படுகிறதோ, அதேபோல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றவும் தமிழ்நாடு அரசின் தடையில்லா சான்றிதழ் தேவை என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இந்த விவகாரத்தில் முந்தைய திமுக அரசு தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை எந்தவித மேல்முறையீடு செய்யாமல் விட்டதால் தான் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துள்ளது.
கல்வியும், மருத்துவமும் மாநில பட்டியலுக்கு வருவது தான் நிரந்தர தீர்வாக இருக்கும். நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற 4 கல்லூரிகளும் எந்த கட்சியைச் சேர்ந்தவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். சமூக நீதியைப் பேசும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
எப்படி தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றப்படலாம். இதற்கு திமுக, அதிமுக கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















