TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 12 மையங்களில் நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) இன்று (04.07.2026) சனிக்கிழமை முதல் தொடங்கியது. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தாள்-1 (Paper-I) தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் பார்வையிட்டு, தேர்விற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வுகள்
மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து வகையான பள்ளிகளிலும் பணிபுரியும் மற்றும் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த 2026-2027 -ஆம் கல்வியாண்டிற்கான பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வானது இரு தாள்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று (ஜூலை 4) தாள்-1 தேர்வு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 5) ஞாயிற்றுக்கிழமை தகுதித் தேர்வின் தாள்-2 (Paper-II) தேர்வு நடைபெறவுள்ளது.
12 மையங்கள்; 3,232 தேர்வர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இத்தேர்வுகள் எவ்வித முறைகேடுகளுமின்றி, தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளை எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 55 பேர் உட்பட மொத்தம் 3,232 ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் விண்ணப்பித்து, தேர்வு எழுதி வருகின்றனர்.
பொதுவான தேர்வர்களுக்குத் தேர்வு நேரமானது காலை 10.00 மணிக்குத் தொடங்கி, மதியம் 1.00 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. அதேவேளையில், மாற்றுத்திறனாளி தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு, மதியம் 2.00 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
200 அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு எவ்வித புகார்களுக்கும் இடமின்றி, மிகவும் நேர்த்தியாகவும் பாதுகாப்புடனும் நடப்பதை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து உறுதி செய்துள்ளன. இத்தேர்வுப் பணிகளுக்காக வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் வழித்தட அலுவலர்கள் மற்றும் தேர்வு அறைக்கண்காணிப்பாளர்கள் எனப் பல்வேறு நிலைகளில் மொத்தம் 200 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தடையற்ற மின்சார வசதியும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தாள்-1 தேர்வில் 25 பேர் ஆப்சென்ட்
தேர்வு மையத்தைப் பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கூறுகையில்; "மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 எழுதுவதற்காக மொத்தம் 830 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இன்றைய தேர்வில் 805 தேர்வர்கள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். மீதமுள்ள 25 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை (Absent). தேர்வு மையங்களில் அனைத்து நடைமுறைகளும் விதிகளின்படி முறையாகப் பின்பற்றப்படுகின்றன," என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ஆர்.பூங்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) பாலசுப்ரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். நாளை நடைபெறும் தாள்-2 தேர்விற்கும் இதே போன்ற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்























