லயோலா கல்லூரி பட்டமளிப்பு விழா: நீதிபதியின் உரை, மாணவர்களின் சாதனை! 3,120 பேருக்கு பட்டம்
நூறாண்டை நெருங்கும் லயோலா கல்லூரி; 97ஆம் பட்டமளிப்பில் 3120 மாணவர்களுக்கு பட்டம்

நூறாண்டை நெருங்கும் லயோலா கல்லூரியில் 97வது பட்டமளிப்பு விழா – மாணவர்களின் சிறப்பான சாதனைகளுடன் நடைபெற்றது. இதில், மொத்தம் 3,120 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லயோலா கல்லூரி, சென்னை, கலை, அறிவியல் மற்றும் வர்த்தகக் கல்வியில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 9,000க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி உள்ளது.
3,120 மாணவர்களுக்கு பட்டம்
இந்த நிலையில் லயோலா கல்லூரி தனது 97வது பட்டமளிப்பு விழாவை நேற்று (மார்ச் 19) ஜூப்ளி கட்டிடத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் சிறப்பாக நடத்தியது. இவ்வாண்டு மொத்தம் 3,120 மாணவர்கள் பட்டம் பெற்றனர்; இதில் 2,558 பேர் நேரில் கலந்து கொண்டு பட்டம் பெற்றனர்.
இந்த நிகழ்வில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை வழங்கினார்.
உறுதிமொழி ஏற்பு
நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தொடக்க வேண்டுதல் ஆகியவற்றுடன் தொடங்கி, தொடர்ந்து வரவேற்புரை, தொடக்க நிகழ்வு, பட்டச் சான்றிதழ்கள் வழங்குதல், உறுதிமொழி ஏற்பு, நிறைவு நிகழ்ச்சி மற்றும் தேசிய கீதம் இடம்பெற்றது.
பட்டமளிப்பு உரையில் நீதியரசர் குரியன் ஜோசப் பேசும்போது, “பல ஆண்டுகளாக இந்த வளாகம் உங்கள் தஞ்சமாக இருந்தது – நள்ளிரவின் நூலகமாகவும், கருத்து வேறுபாடுகளின் விவாத அரங்காகவும், நட்புகளின் சந்திப்பிடமாகவும், சிந்தனையின் அமைதியான இடமாகவும் இருந்தது. இன்று, நீங்கள் இந்த வளாகத்தின் வாயில்களைத் தாண்டி வெளியேறுகிறீர்கள்; பதில்களைத் தேடும் மாணவர்களாக அல்ல, பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொறுப்பான குடிமக்களாக.
நீங்கள் அவசரமாக இருக்கிறீர்கள் என்று சிலர் கூறலாம். ஆனால் அநீதிக்கெதிரான அவசரம் ஒரு நற்குணம். எனினும், அந்த அவசரத்துடன் ஒழுக்கமும் இணைந்திருக்க வேண்டும்; உணர்ச்சி கொள்கையால் வழிநடத்தப்பட வேண்டும்; சமூகச் செயற்பாடு நெறிமுறையில் நிலைத்திருக்க வேண்டும்.

என் நீதித்துறைப் பணிக்காலத்தில் நான் கற்ற முக்கியமான உண்மை என்னவென்றால், கோபம் சத்தமாக இருக்கும்; ஆனால் அரசியலமைப்புச் சிந்தனை அமைதியாகவும் உறுதியானதாகவும் இருக்கும். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, நிறுவனங்கள் எவ்வளவு நெகிழ்வானவையாகவும் அதே நேரத்தில் வலிமையானவையாகவும் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். அரசியலமைப்பு காகிதத்தில் அச்சிடப்பட்டதால் அல்ல, மனிதர்களின் மனசாட்சியில் பதிந்திருப்பதால் அது நிலைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
மொத்தம் 3,120 பட்டதாரிகளில், UG மற்றும் PG மாணவர்களில் 54 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர். இதில் 2,558 பேர் நேரில் பட்டம் பெற்றனர். மேலும் விழாவில் நேரில் பங்கேற்காத 562 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும்:
- 74 முதுநிலை மாணவர்கள் NET/ SET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
- 625 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்
- 74 பேர் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர்
- 826 பேர் மேல்படிப்பைத் தொடருகின்றனர்.
























