கேரளாவில் பள்ளி விடுமுறை மாற்றம்: கோடை விடுமுறை ஜூன்-ஜூலைக்கு மாறினால் என்ன? சூடுபிடிக்கும் விவாதம்
42% பேர் விடுமுறையை ஜூன்- ஜூலைக்கு மாற்றுவதை ஆதரித்துள்ளனர். 30% பேர் தற்போதைய ஏப்ரல்-மே விடுமுறையே தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் மாநிலத்திற்கு ஏற்ப பள்ளி மாணவர்களுக்கு பாட திட்டங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் நடைமுறையில் உள்ளன. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கோவை விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதம் விடப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பள்ளி விடுமுறை கால அட்டவணையை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசு ஒரு முக்கிய விவாதத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது கோடைக்காலத்தில் வழங்கப்படும் வருடாந்திர விடுமுறையை, கனமழை பெய்யும் பருவமழை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி ஒரு திட்டத்தை முன்மொழிந்து, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை கோரியுள்ளார்.
தமிழகத்தை போலவே கேரளாவில் தற்போது பள்ளிகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அதிக வெப்பம் நிலவுவதால், மாணவர்கள் வெளியில் விளையாடுவதும், பயணங்கள் மேற்கொள்வதும் கடினமாக இருக்கும். அதே சமயம், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனால், கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் வானிலை எச்சரிக்கைகள் காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பல சமயங்களில், பள்ளி கட்டிடங்கள் மழை நிவாரண முகாம்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது மாணவர்களின் கல்வியை அதிகம் பாதித்தது.
இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தனது முகநூல் பக்கத்தில் ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளார். அதன்படி, ஏப்ரல்-மே மாதங்களில் வழங்கப்படும் கோடை விடுமுறையை, ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றினால் என்ன என்பது தான் அந்த யோசனை. அமைச்சரின் இந்த அறிவிப்பு, கேரளாவில் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கேரள பத்திரிகை நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், 42% பேர் விடுமுறையை ஜூன்-ஜூலைக்கு மாற்றுவதை ஆதரித்துள்ளனர். அதே நேரத்தில், 30% பேர் தற்போதைய ஏப்ரல்-மே விடுமுறையே தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.
சுமார் 27% பேர் மே-ஜூன் மாதங்களில் விடுமுறை அளிப்பது ஒரு நல்ல சமரசமாக இருக்கும் என கருதுகின்றனர். இந்த மாற்றத்தை ஆதரிப்பவர்கள், பருவமழை காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது கோடை வெயிலில் அனுப்புவதை விட ஆபத்தானது என்று வாதிடுகின்றனர். மழைக்காலத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் நோய்த்தொற்றுகள் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், மழைக்கால விடுமுறை, கற்பித்தல் நாட்கள் இழப்பை குறைக்கும் மற்றும் குடும்பங்கள் தங்கள் பயணங்களை திட்டமிடவும் உதவும் என ஐ.ஐ.எம் கோழிக்கோடு பேராசிரியர் சூர்ய பிரகாஷ் பதி போன்ற கல்வியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பள்ளிகளை ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தினால், மாணவர்கள் கடுமையான வெப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் எந்த அவசர முடிவும் எடுக்கப்படாது என்று அமைச்சர் சிவன்குட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.





















