ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ரசிகர்களின் வசதிக்காக, கேரள மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (20.07.2026) விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறும் நிலையில், கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 20) விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் சதீஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது. இதைக் காணும் ரசிகர்களின் வசதிக்காக, கேரள மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (20.07.2026) விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகளில் மாற்றமில்லை
எனினும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 உலகக் கோப்பைத் தொடரின் சாம்பியன் பட்டத்தைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி இன்று (ஜூலை 19) நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
கால்பந்தும் கேரள மாநிலமும்
இந்தியாவிலேயே கால்பந்து விளையாட்டிற்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கும் மாநிலங்களில் கேரளா முதன்மையானது. குறிப்பாக, அர்ஜென்டினா போன்ற சர்வதேச அணிகளுக்கு அங்கு லட்சக்கணக்கான தீவிர ரசிகர்கள் உள்ளனர். இறுதிப் போட்டி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கி அதிகாலை வரை நடைபெறும் என்பதால், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடிய விடிய கண்விழித்துப் போட்டியைப் பார்ப்பார்கள்.
இதனால் மறுநாள் காலை மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, கேரள முதல்வர் சதீசன் இந்த முடிவை எடுத்துள்ளார். முதல்வரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், நாளை (20.07.2026) திங்கட்கிழமை கேரளாவில் செயல்படும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து ரசிகர்கள், மாணவர்கள் உற்சாகம்
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எவ்வித இடையூறுமின்றி முழுமையாகக் கொண்டாடுவதற்காக மாநில அரசே விடுமுறை அறிவித்திருப்பது, கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























