NEET Re Exam: கடும் வெப்ப அலை: ஜூனில் நீட் மறுதேர்வு- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்
நீட் மறுதேர்வு குறித்து, மத்தியக் கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுக்கும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கான வசதிகளை உறுதி செய்ய மாநிலங்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் கடுமையான கோடை வெயில் மற்றும் வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் நீட் மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய அடிப்படை ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்தது என்ன?
தேசிய அளவிலான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் லீக் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடைபெறுகிறது. மே 3ஆம் தேதி முதலில் தேர்வு நடந்த நிலையில், மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுத மையங்களுக்கு வருவது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுக்கும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும்?
இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ’’மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவ மாணவிகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், போதுமான குடிநீர் வசதி, காற்றோட்டம் மற்றும் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
தேர்வு மையங்களுக்கு வெளியே மாணவர்களுக்காக காத்திருக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான நிழல் மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு எவ்வித இடையூறும் இன்றி தேர்வு சுமுகமாக நடைபெற தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.
அவசரகால மருத்துவ உதவிகள்
அவசரகால மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அதற்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்களையும் மையங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களை வந்தடைய தகுந்த போக்குவரத்து வசதிகளை அமைத்து தர வேண்டும்’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























