![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அரியர் தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தோல்வி விவகாரம்: மறுத்தேர்வு நடத்த வேளாண் பல்கலைக்கழகம் முடிவு!
தேர்வில் குளறுபடிகள் நடந்து இருப்பதாக கூறி வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் உடன் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
![அரியர் தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தோல்வி விவகாரம்: மறுத்தேர்வு நடத்த வேளாண் பல்கலைக்கழகம் முடிவு! Coimbatore Agricultural University has decided to hold re-examination in the case of failure of 80 per cent students in the arrear examination அரியர் தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தோல்வி விவகாரம்: மறுத்தேர்வு நடத்த வேளாண் பல்கலைக்கழகம் முடிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/486fae5e6c34d2d721907026574a0f6b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் இளங்கலை பாடப் பிரிவில் 10 பட்டப் படிப்புகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 14 உறுப்புக் கல்லூரிகள், 29 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இதற்கிடையே கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டு மற்றும் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்களில், செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரியர் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வும், நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக் கழகம் டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்டது.
இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை எனவும், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. தேர்வில் குளறுபடிகள் நடந்து இருப்பதாக கூறி வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் உடன் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “அரியர் தேர்வில் பல்வேறு குழறுபடிகள் நடந்துள்ளன. முறையாக விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. மாணவர் பெயர் என்ற இடத்தில் ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா என போடப்பட்டு 63 மார்க்குகள் போடப்பட்டுள்ளன. அதேபோல நேரில் நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை என போடப்பட்டுள்ளது.
மாணவர்கள் முறைகேடு செய்ததாக கூறுவதை ஏற்க முடியாது. மாணவர்களுக்கு கண்காணிப்புகளுடன் தான் தேர்வு நடத்தப்பட்டது. ஒருவேளை முறைகேடு நடந்திருந்தால், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை மட்டும் பெயிலாக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக மாணவர்களை பெயிலாக்கி இருப்பதை ஏற்க முடியாது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை மறு பரிசீலணை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் வேளாண்மைப் பல்கலைகழகம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக அப்பல்கலைக் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் வீடுகளில் இருந்து கைபேசி வாயிலாக தேர்வு எழுதும் வகையில் ஒரு செயலி உருவாக்கி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வால் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் செய்முறை தேர்வு முடிவுகள் அறிவித்த பின்னர், ஒரு வாரம் கழித்து மறுதேர்வுக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குதல், படிப்பதற்கான பாடக்குறிப்புகளை பகிர்ந்தளித்தல், தேர்வு நடக்கும் போது உணவு அளித்தல், தங்குவதற்கு இடம் அளித்தல், ஒரு நாளைக்கு ஒரு தேர்வு நடத்துதல், தேர்வுக்கான பதிவு கட்டணத்தை இரத்து செய்தல் ஆகிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)