TET தேர்வில் புதிய மாற்றம்! ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி- என்ன தெரியுமா?
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்கள், நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும்- ஆசிரியர் தேர்வு வாரியம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் குறைப்பு, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டெட் தேர்வுக்கும் பொருந்தும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு
முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தபடி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்றன. குறிப்பாக தாள் 1 நவம்பர் 15ஆம் தேதியும் தாள் 2 நவ.16 அன்றும் தேர்வுகள் நடைபெற்றன.
இதற்கிடையே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்கள், நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு மதிப்பெண்கள்?
பொதுப் பிரிவினர்- அதிகபட்ச மதிப்பெண்கள் – 150, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாள் 1 – 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்கள், தாள் 2 – 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்கள்
பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி / டிஎன்சி/ மாற்றுத் திறனாளி பிரிவினர்- அதிகபட்ச மதிப்பெண்கள் – 150, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாள் 1 – 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள், தாள் 2 – 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள்
எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள், எஸ்டி பிரிவினர்-க்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் 150 ஆக உள்ள நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாள் 1 – 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள், தாள் 2 – 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள் ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பின்னணி
ஆர்டிஇ எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்தியாவில் ஆசிரியர் பணியில் சேர ஒவ்வொருவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆகும்.
இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கேற்க முடியும். இதற்கு முன் TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பொது பிரிவினர் 60 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதேபோல பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இந்த மதிப்பெண் தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
























