சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏஐ புரட்சி; மாணவர் நல்வாழ்வுக்காக மதிப்பீடு- புதிய திட்டம்!
அட..ஏஐ அடிப்படையில் தேர்வு சிபிஎஸ்இ பள்ளிகளில் அறிமுகம்- யாருக்கெல்லாம் தெரியுமா?

சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஆலோசனையாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மதிப்பீடு அறிமுகம் செய்யப்படுகிறது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரியும் ஆலோசனையாளர்கள் மற்றும் மாணவர்களின் நல்வாழ்வுக்கான ஆசிரியர்கள், குறிப்பாக சமூக-உணர்வு சார்ந்த ஆலோசனையாளர்களுக்கான இணையவழி கண்காணிப்புடனான மதிப்பீட்டுத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளிகளில் திறனை மேம்படுத்துதல் மற்றும் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஆலோசனையாளர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவதற்காக, இந்தத் தேர்வு பல கட்டங்களாக நடத்தப்படும் என கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டம் கடந்த மாதம் தொடங்கியது.
இந்த மதிப்பீடு பாரம்பரிய தேர்வு முறைகளைத் தாண்டி, ஆலோசனையாளர்களின் நடைமுறைத் திறன்கள், நெறிமுறைகள் குறித்த புரிதல் மற்றும் மாணவர்களின் சமூக- உணர்வு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
ஏஐ மதிப்பீட்டு தளம்
பாதுகாப்பான, தரப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதற்காக, 'டிஜி-எக்ஸாம்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மின்னணு தளத்தில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தொழில்நுட்ப அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளுக்கு கல்வியாளர்களைப் பழக்கப்படுத்தவும் இந்த முயற்சி உதவுவதாக வாரியம் குறிப்பிட்டுள்ளது.
மதிப்பீட்டில் நேர்மை மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான இலக்குகளை இந்தத் திட்டம் ஆதரிப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், தேர்வர்கள் எங்கிருந்தாலும் இணைய வழியில் பங்கேற்கும் வசதியை இது ஊக்குவிப்பதோடு, தேசிய அளவிலான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய தரங்களுக்கு ஏற்ப மின்னணு நடைமுறைகளையும் இது பின்பற்றுகிறது.
மனநலம் முக்கியம்
ஆலோசனையாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் பள்ளிகளில் மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு ஆதரவு அமைப்புகளைச் சிறந்த முறையில் கட்டமைக்க இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது எனவும் சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது.
























