அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்! சிபிஎஸ்இ அதிரடி!
ஆசிரியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்; அதிரடி காட்டும் சிபிஎஸ்இ- என்ன காரணம் தெரியுமா?

மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, தனக்குக் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் பணியில் ஈடுபடாத பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் மனநலப் பயிற்சி வழங்கப்படுவதை கட்டாயம் ஆக்கி உள்ளது.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 முறை இந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கும் மன நலத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெறப்பட்ட மனநல நிபுணர்கள் இந்த பயிற்சியை நடத்த வேண்டும் எனவும் இந்த வகுப்புகளில் உளவியல் சார்ந்த முதலுதவிகள், எச்சரிக்கை சமிக்ஞைகளை அறிந்து கொள்ளுதல், சுய-தீங்கு சூழ்நிலைகளைக் கையாளுதல் மற்றும் பரிந்துரை வழிமுறைகள் பற்றி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாணவர்களைக் கையாள்வது குறித்து பயிற்சி
வாரியத்தின் அடிப்படை அறிவிக்கையின்படி, கற்பிக்கும், கற்பித்தல் அல்லாத பிற பணிகளில் ஈடுபடும், நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் மாணவர்களைக் கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய வகையில், அறிவுப்பூர்வமான வகையில் பேதமில்லாமல் மாணவர்களை நடத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அதேபோல, பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் கூட, கூடுதல் மனநலம் சார்ந்த பயிற்சியை வழங்க சுற்றறிக்கை அறிவுறுத்தி உள்ளது. மன அழுத்தம் சார்ந்த சிக்கலை கையாள்வது எப்படி? மன நல அறிவு, உணர்வுகளைக் கையாளுதல், வாழ்க்கை திறன் கல்வி ஆகியவையும் இதில் இணைக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுக்கு 2 முறை பயிற்சி
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 முறை இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கும் மன நலத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள், மாணவர் நடவடிக்கைகள் மற்றும் அதுதொடர்பான உள்ளீடுகள் குறித்த ஆண்டு அறிக்கையை தயார் செய்து வைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல விளையாட்டு, கல்வி, ஆளுமை மேம்பாடு மற்றும் தேர்வு நடைமுறை உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சான்றிதழ் பெற்ற கவுன்சிலர்கள் வழியாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு கேரியர் கவுன்சிலிங் வழங்கவும் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
























