![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kalai Thiruvizha 2023: களைகட்டும் கலைத் திருவிழா போட்டிகள்: அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று தொடங்கி களைகட்டி வருகின்றன.
![Kalai Thiruvizha 2023: களைகட்டும் கலைத் திருவிழா போட்டிகள்: அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல் Art festival competitions started 2023- 24 Tamil Nadu Govt School Students School Education Department Kalai Thiruvizha 2023 Kalai Thiruvizha 2023: களைகட்டும் கலைத் திருவிழா போட்டிகள்: அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/21/31a9dda440cf4de162d7da26b313bafa1700569767422332_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று தொடங்கி களைகட்டி வருகின்றன. திருச்சி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் போட்டிகள் நடைபெற்றன. இந்த விழாக்கள் தொடர்ந்து 22.11.2023, 23.11.2023 மற்றும் 24.11.2023 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளன.
யாருக்கெல்லாம் போட்டிகள்?
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனோடு, கலைத் திறனைக் கண்டறியும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை கலைத் திருவிழாவை நடத்த முடிவு செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். . இதை அடுத்து, கடந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
என்னென்ன போட்டிகள்?
நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் முதற்கட்டமாக பள்ளி அளவில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடந்தன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.
அரசுப் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகள் வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று தொடங்கின.
தொடர்ந்து இந்த விழாக்கள் 22.11.2023, 23.11.2023 மற்றும் 24.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றன. குறிப்பாக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் வேலூர் மாவட்டத்தில் நடைபெறுகின்றன. 9 -10ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலும் . 11-12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் திருச்சி மாவட்டத்திலும் நடைபெற உள்ளன.
மாநில அளவிலான இப்போட்டிகளை மூன்று மாவட்டங்களிலும் நடத்த ரூ.89.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளர்களுக்கு என்ன பரிசு?
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளன. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)