1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியோடு முடியும் நிலையில், அதற்குப் பிறகு 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் தடை எதுவும் இல்லாமல் நடைபெறும்- அமைச்சர் அன்பில் மகேஸ்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிற வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, விடைத் தாள்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன.
ஸ்கிரைப் நியமனம்
ஸ்கிரைப் நியமனத்தில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் அனைவரிடம் இருந்தும் ஆசிரியர்களையே நியமனம் செய்யக்கோரி முதல்வர் அலுவலகத்துக்கு நிறையக் கோரிக்கைகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்ய மாற்றி அறிவிக்கப்பட்டது.
மாலை நேரத்தில் ஆப்சென்ட் மாணவர்கள் விவரம்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆப்செண்ட் ஆன மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, தேர்வை எழுதாதவர்களின் எண்ணிக்கை மாலை நேரத்தில் வெளியிடப்படும். பெற்றோர்களின் அறிவுறுத்தல், உத்வேகம் அளிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது.
10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்த ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றே அதிகரிக்கும். இதுதொடர்பாக மாவட்ட வாரியாக பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆண்டுத் தேர்வுகள் எப்போது?
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியோடு முடியும் நிலையில், அதற்குப் பிறகு 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் தடை எதுவும் இல்லாமல் நடைபெறும். தேர்வுகள் உடனடியாக நடைபெற்று, விடுமுறைகள் அறிவிக்கப்படும்.
ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு, 2ஆம் வாரத்துக்குள் ஆண்டுத் தேர்வுகளை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். தேர்தலால் எந்தப் பணிகளும் தடைப்படாது. மே மாதத்தில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என்றே எதிர்பார்க்கிறோம்.
எந்தெந்தத் திட்டங்கள்?
5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த கணத்தில் இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், மகிழ் முற்றம், வானவில் மன்றம், ஸ்டெம் ஆய்வகம் உள்ளிட்ட 156 திட்டங்களைக் கொண்டு வந்தோம். இவை அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமான திட்டங்கள்தான்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகள் உத்தேசமாக நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























