ABP Exclusive: டிசிஎஸ் அதிர்ச்சி: வேலைக்கு சேர்ந்த 5 நாட்களில் ராஜினாமா செய்ய நிர்பந்தம்! இளைஞரின் பகீர் அனுபவம்!
வேலைக்குச் சேரும்போதே இவை அனைத்தையும் டிசிஎஸ் நிறுவனத்தில் கூறி இருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றவர்கள், இப்போது அதைக் காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பினர்.

முன்னாள் டிசிஎஸ் ஊழியர் ஒருவர், தான் வேலைக்குச் சேர்ந்த 5 நாட்களுக்கு உள்ளாகவே தான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது வேலைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற அச்சுறுதலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து ஏபிபி இடம் பேசிய அவர், ’’டிசிஎஸ் நிறுவனத்தின் எச்ஆர், 2 ஆப்ஷன்களை மட்டுமே முன்வைத்தார். நான் 2025 எம்பிஏ பட்டதாரி. நான் டிசிஎஸ் எம்பிஏ ஹைரிங் மூலம் வேலைக்குச் சேர்ந்தேன். டிசிஎஸ் நிறுவனத்தில் நண்பர்கள் பலர் பணிபுரிந்து வந்ததால், நானும் அங்கேயே வேலை செய்ய ஆசைப்பட்டேன். பல நூறு மைல்கள் அலைந்து திரிந்து, வேலைக்கான தேர்வுகளில் கலந்துகொண்டேன்.
கிடைத்த அழைப்புக் கடிதம்; தொடங்கிய பயிற்சி
இறுதியாக கிரேட் சி1-ல் Assistant System Analyst ஆகப் பணியில் சேர்ந்தேன். அழைப்புக் கடிதம் கிடைத்து, அனைத்து ஃபார்மாலிட்டிகளையும் முடித்தேன். அப்போதுதான் ஆரம்பகட்ட கற்றல் பயிற்சியுடன் தொடங்கி இருந்தது. திடீரென ஹெச்ஆர் என்னை அழைத்தார். ’’உங்களுடைய பின்னணி சரிபார்ப்பு அறிக்கை (BGC) சரியாக இல்லை'' என்றார்.
முன்னதாக நான் பணிபுரிந்த நிறுவனம் திவாலாகி முற்றிலுமாக மூடப்பட்டது. அங்கு மனிதவளம் மேலாளர் யாரும் இல்லை. எனது முந்தைய நிறுவனம், சம்பளத்தை ரொக்கமாகப் பெறுவதில் பிரச்சினை இல்லை எனில், மாதத்திற்கு 30,000 சம்பளம் தர முடியும் என்று கூறியது, நான் முட்டாள்தனமாக அதை ஏற்றுக்கொண்டேன், எனவே என்னுடைய ரிலீவிங் கடிதத்தைத் தவிர, நான் வேலை செய்ததற்கான எந்த ஆதாரமும் அவர்களிடத்தில் இல்லை. அதேபோல பிஎஃப் கணக்கும் என்னிடத்தில் இல்லை.
வேலையை விட்டே அனுப்பினர்
வேலைக்குச் சேரும்போதே இவை அனைத்தையும் டிசிஎஸ் நிறுவனத்தில் கூறி இருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றவர்கள், இப்போது அதைக் காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பினர்.
அப்போது, ஒரு மணி நேரம் அவகாசம் அளித்து, ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது வேலையை விட்டு நிறுத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னதாக ரெடிட் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவுக்கு, நெட்டிசன்கள் பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் தங்களுக்கும் டிசிஎஸ் நிறுவனத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த போக்கு குறித்த பதிவு, ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
























