Crime: 9 வருட காதல்.. மாமனார், மாமியாரின் ஆத்திரம்..! கணவனை போட்டு தள்ளி நாடகமாடிய புது மணப்பெண்
Crime: பல வருட காதலுக்கு பின்னர் கரம்பற்றிய கணவரை மனைவியே கொலை செய்து நாடகமாடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: பெற்றோர் பேச்சை கேட்டு செயல்பட்டதால் கணவனை கொன்றதாக, மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் கணவனை கொலை செய்த புதுமணப்பெண்:
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் 9 ஆண்டுகளாக காதலித்து கரம்பற்றிய கணவனை, திருமணமான இரண்டே மாதங்களில் மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ஸாத்நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், 33 வயதான ஜிதேந்திரா குமார் யாதவ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த மரணம் எந்த சந்தேகங்களையும் எழுப்பவில்லை. அக்கம்பக்கத்தினர்ம் ஜிதேந்தர் தற்கொலை செய்துகொண்டதாகவே கூறினர். ஆனால், பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டதே, அவரது மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து கிடைத்த ஒட்டுமொத்த ஆதாரங்களையும் சேகரித்த காவல்துறையினர். காதல் மனைவியால் தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உறுதி செய்துள்ளனர். இதற்கு பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமே உதவியதும் தெரிய வந்துள்ளது.
காதல் கணவனை கொன்றது ஏன்?
எட்டாவா மாவட்டம் பவுபோரா பகுதியை சேர்ந்த ஜிதேந்தர், ஜோதி என்பவரை மாணவ பருவம் தொடங்கி 9 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து இந்த தம்பதி இஸ்ஸாத் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். காவல்துறை வெளியிட்டுள்ல தகவல்களின்படி, “திருமணமான ஒரு சில வாரங்களிலேயே பண விவகாரத்தில் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை மூண்டுள்ளது. மனைவி ஜோதியின் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஜிதேந்திரா இழந்துள்ளார். இதுதொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது குறித்து கடந்த ஜனவரி 26ம் தேதி ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து ஜோதி தனது குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
மாப்பிள்ளையை கொலை செய்த குடும்பம்
மகளின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்த தந்தை காளிசரண், தாய் சமேளி மற்றும் சகோதரர் தீபக் ஆகியோர், ஜிதேந்தர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் சூழல் மோசமாக தந்தை மற்றும் சகோதரர் சேர்ந்து மாப்பிள்ளையிம் கை மற்று கால்களை இறுகப்பற்றிக் கொள்ள, மனைவி ஜோதியே ஜிதேந்திராவின் கழுத்தை பிடித்து நெறித்துள்ளார். இதனால் மூச்சுவிட சிரமப்பட்ட அவர் ஒரு சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். இதை மறைக்கும் விதமாக அவரது கழுத்தில் ஒரு கயிறை கட்டி, அவரே வீட்டில் உள்ள கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை போல சித்தரித்துள்ளனர். பிறகு திடீரென சத்தம் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதை போல அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சகோதரர் புகாரில் வெளிவந்த உண்மை
தற்கொலையாகவே கருதப்பட்ட நிலையில், ஜிதேந்திராவின் சகோதர் அஜய் குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அதன் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் தான், ஜிதேந்தர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. அதன்பேரில் ஜோதியை கைது செய்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பேரில் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள சகோதரர் தீபக்கை தேடி வருகின்றனர்.
























