கள்ளக்குறிச்சியில் பயங்கரம்... மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்
கள்ளக்குறிச்சியில் விசிக பெண் நிர்வாகி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே நானும் ரவுடிதான் என்பதைப் போல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட விசிக பெண் மாவட்டச் செயலாளர், ஒன்றரை மாதத்திற்குப் பின் வெளியான சம்பவம் தொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவர், விசிக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், பழனியம்மாள் தனது வீட்டிற்கு எதிரில் சுமார் 10 சென்ட் பரப்பளவிலான இடத்தில் பலவிதமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்து வந்துள்ளார். தன்னுடைய பட்டா இடத்தில் வேறொருவர் எப்படி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடியும் எனக்கூறி கனகராஜ் மகன் மருத்துவர். சரவணன் என்பவர் மரத்தை வெட்டி வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விசிக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் பழனியம்மாள், யாருடைய பட்டா இடத்திலும் நான் மரக்கன்றுகளை வளர்க்கவில்லை. அரசுக்குச் சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தில் தான் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறேன் எனக்கூறி, அடியாட்களை வரவழைத்து, சரவணன் வீட்டின் முன்பக்கம் உள்ள கேட் மற்றும் ஜன்னல் ஆகியவற்றை கல் மற்றும் கட்டையால் அடித்து, உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, சரவணன் குடும்பத்தினரை பழனியம்மாள் கையாலும், கற்களைக் கொண்டும் தாக்கியுள்ளார். மேலும் அங்கு நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சரவணனை மிரட்டி அவரிடமிருந்து செல்போனையும் பிடிங்கிச் சென்றுள்ளார். அதனை வாங்க சென்ற நபரை பழனியம்மாள் கணவர் வேல்முருகன் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, இருதரப்பினர் அளித்தப் புகாரின் பேரில், தியாகதுருகம் காவல் நிலையப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஒன்றரை மாதத்திற்குப் பின், இச்சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

