கொலையாளிகள் சிக்கியது எப்படி? - திருத்தணி 15 வயது சிறுவன் கொன்று புதைத்த வழக்கின் பகீர் பின்னணி
திருத்தணியில் ஆடு சரியாக வளர்க்கவில்லை என்று அடித்துக்கொல்லப்பட்ட சிறுவன் வழக்கில் நான்கு பேர் கைது.

திருத்தணி அருகே 15 வயது சிறுவனை ஆடு சரியாக வளர்க்கவில்லை என்று அடித்துக் கொன்ற வழக்கில் இரண்டு ஆண்கள், ஒரு பெண், 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சார்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகில் உள்ள முருகம்பட்டு ஊராட்சி பகுதியில் பண்ணை நிலம் கோழி பண்ணை இடத்தினை அதே பகுதியை சார்ந்த கவியரசன் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் இடத்தைப் பெற்று கோழி பண்ணை, வாத்து பண்ணை, ஆடு வளர்க்கும் பண்ணை எடுத்து நடத்தி வருகிறார்.
இதனை பராமரிப்பதற்கு வேலையாட்களாக பாலமுருகன் நண்பர் திருத்தணி நகராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரது மூலமாக அவரது சின்னம்மா வெண்ணிலா என்பவரை அழைத்து வந்து பாலமுருகன் பண்ணையில் பணியில் அமர்த்துகிறார்கள். இதில் வெண்ணிலா அவரது மூன்று மகன்கள் சுரேஷ் வயது 15, இரண்டாவது மகன் சூர்யா வயது 7, மூன்றாவது மகன் தேவா வயது 4 ஆகியோர்கள் 6 மாதமாக பண்ணை இடத்தில் தங்கி பணியில் இருந்து உள்ளனர்
நான்கு மாதத்திற்கு மேலாக பணியில் இருந்த இவர்கள் திடீரென்று வெண்ணிலா திருத்தணி காவல் நிலையத்தில் இரவு தனது மகனை அடித்துக் கொன்று விட்டனர், புதைத்து விட்டனர் என்று கதறியபடி புகார் அளித்துள்ளார். திருத்தணி போலீசார் இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வெண்ணிலாவை அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் பாலமுருகன் என்பவர் பிப்ரவரி மாதம் குடும்பத்துடன் தென் மாநிலங்களுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.
அதன் பிறகு அவரது பண்ணை நிலத்திற்கு சென்றபோது கோழி போன்றவை குறைவாக இருந்துள்ளது. இது குறித்து கேட்டும் மேலும் ஆடுகள் பக்கத்து தோட்டத்தில் மேய்ந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் பண்ணையில் பணிபுரிந்த வெண்ணிலாவிடம் கேட்டுள்ளார். அப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாலமுருகனுக்கு ஆதரவாக அவரது நண்பர் வினோத் வெண்ணிலாவின் மகன் சுரேஷை இரும்பு சுத்தியலில் கடுமையாக தாக்கி கொன்றுள்ளார்.
அவர் தாக்கியதில் மரணம் அடைந்த சுரேஷை அந்தப் பண்ணை நிலத்தில் ஒரு பகுதியில் சிமெண்ட் கல்கள் வைத்து புதைத்துள்ளனர். இதற்கு ஆதரவாக பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி, அவரது 15 வயது மகள் மற்றும் வினோத் ஆகியோர்கள் உடந்தையாக இருந்துள்ளனர் என்று வெண்ணிலா தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் வெண்ணிலா தெரிவித்த பாலமுருகன், இவரது மனைவி புவனேஸ்வரி இவரது 15 வயது மகள் மற்றும் வினோத் ஆகியோர்களை இரவோடு இரவாக அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூர் அருகில் கடம்பத்தூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்
இதுகுறித்து கைது செய்யப்பட்ட பாலமுருகன் மற்றும் வினோத் ஆகியோர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து வந்து புதைக்கப்பட்ட இடத்தை அவர்களால் அடையாளம் காணப்பட்டு திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலாளர்/ நீதிபதி -நளினி தேவி, திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் ஷீபன் திமான், திருவள்ளூர் மாவட்ட பயிற்சி ஆட்சியர் பவித்ரா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ குழு தலைமை மருத்துவர்கள் அருண் கௌதமன், நரசிம்மன், திருவள்ளூர் மாவட்ட தடையவியல் அறிவியல் உதவி இயக்குனர் மோகன் ஆகியோர் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. பின்னர் சம்பவ இடத்தில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
சடலம் புதைக்கப்பட்டு நான்கு மாதத்திற்கு மேல் ஆகிறது என்பதால் அதே பகுதியில் வைத்து பிரேத பரிசோதனை மருத்துவர்கள் குழு செய்தனர். பிரேத பரிசோதனை இரண்டு மணி நேரம் ஆனது. அதன் பிறகு வெண்ணிலாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு திருத்தணி நகராட்சியில் அவரது பிரேதம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மருத்துவர்கள் குழு, சுரேஷ் கொலை செய்யப்பட்ட விதம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வெண்ணிலாவின் புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சம்பவ இடத்தில் விசாரணை செய்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்தில் பாலமுருகனின் 15 வயது மகளை அவரது நண்பரை போல் பழகிய இந்த கொலை வழக்கில் சிக்கி உள்ள வினோத் காதலித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வெண்ணிலாவை அடைத்து வைத்து சித்ரவதை செய்து, வெண்ணிலாவிடம், உன் மகன் ஏதோ இறந்து விட்டான், உனக்கு மகனாக நான் இருக்கிறேன் என்று வினோத் ஆசை வார்த்தை கூறி, உனக்கு நான் வீடு கட்டித் தருகிறேன் என்று பண்ணை உரிமையாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்
இதனால் அமைதியாக இருந்த வெண்ணிலா மூன்று மாதத்திற்கு மேலாகியும் வீடு கட்டிக் கொடுக்கவில்லை பணம் தரவில்லை என்று இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இந்த சம்பவம் குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் வெண்ணிலா புகார் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Before You Go
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















