தாயின் ஈமச்சடங்கு பணம் வாங்க லஞ்சம் - கையும் களவுமாக சிக்கியதும் மயக்கம் போட்ட தாசில்தார்
தனி வட்டாட்சியர் வள்ளியம்மாள் பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே இறந்தவரின் ஈமச்சடங்கு பணம் பெற வந்த நபரிடம் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரை கைது செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள ரூ.25 ஆயிரம் பணத்தை பெற பெருமாள் மகன் சேகர் என்பவர் நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாவிடம் மனு அளித்துள்ளார்.
இதன் காரணமாக பணத்தை கொடுக்க சேகரிடம் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மூன்றாயிரம் ரூபாய் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது சேகர் 2000 ரூபாய் பணத்தை மட்டும் வள்ளியம்மாளிடம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு மற்றும் ஆய்வாளர் கௌரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சேகரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி உள்ளனர்.
அப்போது தனி வட்டாட்சியர் வள்ளியம்மாள் பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இதன் காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவருடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வள்ளியம்மாள் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்றம்பள்ளி அருகே இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக ரூ.25 ஆயிரம் பணம் பெறுவதற்காக லஞ்சமாக 2000 ரூபாய் பணம் பெற்ற சமூக நலத்திட்ட பாதுகாப்பு தனி வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















