நெல்லையில் இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி மிரட்டல் - பிரதீப் சிக்கியது எப்படி..?
சமூக வலைதளத்தில் Privacy Settings Enable செய்து வைக்குமாறும், முன்பின் தெரியாத நபர்கள் சமூக வலைதளங்களில் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தல்..

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே அகஸ்தியர்பட்டியை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக உள்ளார். இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 21.06.2022-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் WhatsApp மூலமாக தொடர்பு கொண்டு ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை WhatsApp-ல் அனுப்பியதாகவும் மேலும் அந்த மர்ம நபர் ஆபாச வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி சரவணன் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையிலான சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த பிரதீப் (22), என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பிரதீப்பை கைது செய்து அவரிடமிருந்து ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் 4 சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், பிரதீப் இன்ஸ்டாகிராம் வலைதளத்தை பயன்படுத்தி வருபவர் என்றும், மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் இளம் பெண்களின் புகைப்படத்தை தனியாக எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி அவர்களை தனது பாலியல் ஆசைக்கு இணங்கும் படியும் ஆபாச வீடியோ அழைப்புகளை செய்யும் படியும் தொடர்ச்சியாக ஆபாச மிரட்டல் கொடுத்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது. மேலும் இது போன்று பல இளம்பெண்களை பிரதீப் மிரட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளத்தில் Privacy Settings Enable செய்து வைக்குமாறும், முன்பின் தெரியாத நபர்கள் சமூக வலைதளங்களில் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும், ஆபாச மிரட்டல்கள் ஏதும் இருக்கும் பட்சத்தில் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது..





















