Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.

Madurai Gun Shot: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மதுரையில் துப்பாக்கிச் சூடு:
மதுரை ஈச்சனேரியை சேர்ந்த தனிப்படை காவலர் மலையரசனின் உடல் எரிந்த நிலையில் கடந்த 19ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்த போலீசார், மூவேந்திரன் என்பவரை சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுற்றி வளைத்தபோது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணனை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் தனது ஆட்டோவில் பயணித்த மலையரசனிடம் இருந்த பணத்திற்காக, அவரை மூவேந்திரன் கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பணத்திற்காக தான் கொலையா?
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36) இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாண்டிசெல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உறவினரினர் சுபநிகழ்வுக்கு பைக் மூலமாக சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்தபோது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மலையரசனின் மனைவி பாண்டிசெல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தான் மலையரசனும் கொல்லப்பட்டு இருக்கிறார். இதனால் இது உண்மையிலேயே பணத்துக்கான கொலை தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு
கடலூர் மற்றும் சென்னையை தொடர்ந்து தற்போது மதுரையிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழக போலீசார் நடத்திய மூன்றாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
கடந்த 20ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஸ்டீபன் என்ற கொள்ளையனை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது. அவர் மீது திருச்சி, நாகை, தஞ்சை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனைதொடர்ந்து, கடந்த 21ம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா எனும் ரவுடி, சென்னை ஆதம்பாக்கத்தில் மறைந்து இருந்தபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் , அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

