திருடர்களை ஆட்டோவில் துரத்திப்பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி பாராட்டு..
அகமது பாட்ஷா மற்றும் பக்தவச்சலம் என்ற இரண்டு திருடர்களும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப் பட்டனர்.

சேலம் அம்மாப்பேட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவரிடம் செல்போன் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் தப்பிய இருவரை துரத்திச்சென்று பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநரை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் அழைத்து பாராட்டினார்.

சேலம் மாவட்டம் நாம மலை அடிவாரம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 28-ஆம் தேதி காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அத்த நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் செல்போன் கீழே விழுந்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அருகில் இருந்து கவனித்த ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரை, உடனடியாக தனது ஆட்டோவில் துரத்திச்சென்று கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி, அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்களில் ஒருவரை பிடித்துள்ளார். மற்றொருவர் தப்பி ஓட முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர்.

இருவரும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் அம்மாபேட்டை அருகிலுள்ள பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த அகமது பாட்ஷா மற்றும் பக்தவச்சலம் என்பது தெரியவந்தது. பிடிபட்ட நபர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சில்லரை காசுகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது, ஏற்கனவே செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை காலில் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. அவரது செயலை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.
ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரை கூறுகையில், தான் மலை பகுதியிலுள்ள கோவிலுக்கு வாரம் தோறும் சென்று வருவதாகவும், அன்று பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வருடம் செல்போன் பறிக்க முயற்சித்ததால் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர், எனவே உடனடியாக ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவர்களே பின் தொடர்ந்து துரத்திச்சென்று திருடர்களின் வாகனத்தை ஆட்டோவை கொண்டு இடித்து மடக்கிப் பிடித்ததாக கூறினார்.
செய்தியை அறிந்த சேலம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், கொள்ளையர்களை விரட்டிச்சென்று பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரையை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி வெகுமதி வழங்கினார். ஆட்டோ ஓட்டுனர் துணிச்சலுடன் திருடர்களை மடக்கிப் பிடித்துள்ளார் என்பதால் பலர் ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரையை பாராட்டி வருகின்றனர்.
அகமது பாட்ஷா மற்றும் பக்தவச்சலம் என்ற இரண்டு திருடர்களும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திருடர்களிடமிருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதால் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















