![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
சேலம்: சிறுமி விஷமருந்தி தற்கொலை, சம்பந்தப்பட்ட நபர்களை போக்சோவில் கைது செய்ய குடும்பத்தினர் போராட்டம்
திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும், ஆபாச புகைப்படங்களை எடுத்து மிரட்டியதாகவும் சிறுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தியதாக பெற்றோர் கடிதத்தை காண்பித்தனர்.
![சேலம்: சிறுமி விஷமருந்தி தற்கொலை, சம்பந்தப்பட்ட நபர்களை போக்சோவில் கைது செய்ய குடும்பத்தினர் போராட்டம் salem: family is protesting that the girl's suicide by poisoning, the people involved should be arrested under the POCSO Act TNN சேலம்: சிறுமி விஷமருந்தி தற்கொலை, சம்பந்தப்பட்ட நபர்களை போக்சோவில் கைது செய்ய குடும்பத்தினர் போராட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/1688edf0637d0478b0c6dc5fe257202b1668594394334189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரம்பலூர் மாவட்டத்தை வேப்பத்தட்டை தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொள்ள விஷமருந்திய நிலையில் ஆத்தூரை அடுத்த வீரகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்தினர், சிபிஎம், மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மணிகண்டன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி சிறுமியை கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியை மணிகண்டனின் தந்தை உள்ளிட்ட இருவர் மிரட்டியதாக மீண்டும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மணிகண்டனின் தந்தை, சித்தப்பா மகன் ஆகிய இருவரை பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
மனஉளைச்சலால் சிறுமி விஷம் அருந்திய நிலையில், அதற்கு முன்பாக தற்கொலை கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் மணிகண்டன் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மயக்க மருந்து செலுத்தி ஆட்டோவில் அழைத்துச் சென்று திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும், ஆபாச புகைப்படங்களை எடுத்து மிரட்டியதாகவும் சிறுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தியதாக பெற்றோர் கடிதத்தை காண்பித்தனர். இறப்பிற்கு காரணமான மணிகண்டன் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். மேலும் நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்கப் போவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், “தனது குழந்தையை மணிகண்டன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து மிரட்டியதால், என் மகள் தற்கொலை செய்து கொண்டார். தனது பிள்ளைக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது. ஆனால் காவல்துறையினர் மணிகண்டன் மீது கடத்தல் வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ளனர். எனவே காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கைது செய்யப்பட வேண்டும்” என்று கூறினார். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)