'நீ ஆபாச படம் பாத்து இருக்க'' மிரட்டி பணம்பறிக்கும் மோசடி கும்பல்: சைபர் கிரைம் எச்சரிக்கை!
புதுச்சேரியில் ஆபாச படம் பார்த்ததாக இளைஞர்களை குறிவைத்து மிரட்டி இணையவழி மோசடி கும்பல் பணம் பறிப்பு

புதுச்சேரி: ஆபாச படம் பார்த்ததாக இளைஞர்களை குறிவைத்து மிரட்டி இணையவழி மோசடி கும்பல் பணம் பறிப்பு செய்வதாக புகார் வந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபாச படம் பார்த்ததாக இளைஞர்களை மிரட்டி இணையவழி மோசடி கும்பல் பணம் பறிப்பு
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் கூறுகையில்:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மற்றும் ஆண்களை குறி வைத்து, மர்ம நபர்கள் நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படங்களை ஆன்லைன் வழியாக பார்த்து உள்ளீர்கள். அல்லது பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள். அது இணைய வழி சட்டப்படி குற்றம். அதற்காக, உங்கள் மீது சைபர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். நீங்கள் விசாரணைக்கு வர வேண்டும் என, சைபர் மோசடி கும்பல் இளைஞர்களை மிரட்டி பணம் பறிப்பு சம்பத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்ந்து, இதுவரையில் 5க்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. அதில், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். உங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க பணம் கொடுக்க வேண்டும் என, கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் மேற்படி நபர்கள் போலீசார் இல்லை என்பதும், சைபர் மோசடிக் காரர்களின் வேலை என்பதும் தெரிய வந்துள்ளது.
மொபைல், வாட்ஸ் ஆப் ஆடியோ கால் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்பவர்கள் உண்மையான போலீசாரா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இதுபோன்று யாரேனும் தொடர்பு கொண்டால், சைபர் போலீஸ் நிலையத்தின் இலவச மொபைல் எண் 1930 மற்றும் 0413 -2276144, 9489205246, மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். சைபர் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை அனுப்பி யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.





















