தமிழகத்தில் 80 வயது மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் சேர்ந்து செய்த கொடூரம் - ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்
பண்ருட்டி அருகே சவுக்கு தோப்பில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.

கடலூர்: பண்ருட்டி அருகே சவுக்கு தோப்பில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கியது. பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.
இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மூதாட்டி படுகாயத்துடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,
மூதாட்டி சவுக்கு தோப்புக்கு செல்வதை நோட்டமிட்ட 35 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் அவர் அணிந்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்ற நிலையில் சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூரில் பதுங்கியிருந்த சுந்தரவேலுவை போலீசார் சுட்டுப்பிடித்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, சுந்தரவேலுவை காலில் சுட்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன்பிறகு, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















