புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: பகுதிநேர வேலை ஆசை காட்டி ரூ.1 லட்சம் அபேஸ்
புதுச்சேரியில் பகுதிநேர வேலை என கூறி பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பகுதிநேர வேலை என கூறி பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
பகுதிநேர வேலை என கூறி மோசடி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனின் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி வாட்ஸ் ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறப்பட்ட படி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால் அதற்கான லாபம் கி கிடைக்கவில்லை, செலுத்திய பணத்தையும் திருப்பித்தரவில்லை.
அதேபோல், மூலகுளம் பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம், சிங்கப்பூரில் வேலை எனக்கூறி ஏஜெண்டுக்கு ரூ.25 ஆயிரம் செயல்முறை கட்டணமாக செலுத்தி ஏமாந்துள்ளார். கோரிமேட்டை சேர்ந்த பெண்ணிடம் ரூ. 41 ஆயிரம், கரசூரை சேர்ந்த ஆண் நபரிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி ரூ.15,420 மோசடி, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண்ணிடம், ஆன்லைனில் சுடிதார் ஆர்டர் செய்து ரூ.36 ஆயிரத்தை இழந்துள்ளார்.
நாவற்குளத்தை சேர்ந்த ஆண் நபரிடம் பள்ளி முதல்வரின் செல்போனை ஹேக் செய்து, அவர் பேசுவது போல் ரூ.50 ஆயிரம் அவசர தேவைக்காக அனுப்ப கூறியுள்ளார். அதன்பேரில் ரூ.10 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகே அவருக்கு, மகனின் பள்ளி முதல்வர் போல் பேசி ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இவர்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.






















