புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: பகுதி நேர வேலை ஆசை காட்டி 9 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி! எச்சரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 9 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.1.98 லட்சம் ஏமாந்துள்ளனர்.

புதுச்சேரி: வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என நம்பி புதுச்சேரியை சேர்ந்த 9 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.1.98 லட்சம் ஏமாந்துள்ளனர்.
ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என நம்பி ஏமாற்றம்
புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த நபரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.47 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 30 ஆயிரம் 240, வம்பாகீர பாளையத்தை சேர்ந்தவர் 28 ஆயிரம் 600, கீழ் அகரத்தை சேர்ந்தவர் 19 ஆயிரத்து 100, புதுச்சேரியை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 999, டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் 9 ஆயிரத்து 500, குயவர்பாளையத்தை சேர்ந்த பெண் 30 ஆயிரம், ரெயின்போ நகரை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 560, குயவர்பாளையத்தை சேர்ந்த பெண் 10 ஆயிரம் என, 9 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 999 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை வருகின்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர்.
சைபர்கிரைம் போலீசில் புகார் அளிப்பது எப்படி?
தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.




















