ரூ.2 லட்சத்துக்காக மகள் விற்பனை.. 54 வயது நபருடன் இரண்டாவது திருமணம்.. தாய் கொடூர செயல்!
புங்கனூரில் பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த ஷோபா பண பிரச்னையால் அவதிப்பட்டார். இடைத்தரகர் மூலமாக மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைத்தால் ரூ.2 லட்சம் பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் ரூ.2 லட்சத்துக்காக பெற்ற மகளை தாய் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் ஆந்திரப்பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள புங்கனூர் பீடி காலனியில் ராமராஜூ - ஷோபா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது குடும்பத்தில் புயல் வீச தொடங்கியது. கணவர் ராமராஜுவுடன் ஷோபாவுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்ததால், தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் முற்றியது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷோபா தனது கணவர் ராமராஜுவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு மகள்களுடன் வெளியேறினார். புங்கனூரில் உள்ள டிட்கோ பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த அவர் பண பிரச்னையால் அவதிப்பட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய ஷோபாவுக்கு ரெட்டெப்பா என்ற இடைத்தரகருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர் மூலமாக கர்நாடக மாநிலம் ராயல்பாடு பகுதியைச் சேர்ந்த ரெட்டி ராஜசேகர் என்பவர் இரண்டாவது திருமணத்திற்காக பெண் தேடி வருகிறார். உங்கள் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைத்தால் நான் ரூ.2 லட்சம் வாங்கி தருகிறேன் என ஷோபாவுக்கு ஆசை காட்டப்பட்டது. இந்த டீலுக்கு ஒப்புக்கொண்ட ஷோபா தனது மகளை விற்க முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி, உன்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறி தனது மூத்த மகளை தனது வீட்டிற்கு அழைத்தார்.
அங்கு மகளிடம் பேசி ராஜசேகருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்த மகளுக்கு 14 வயது தான் ஆகியிருந்தது. இந்த திருமண ஏற்பாடுகளை ஷோபாவின் தாய் தான் கவனித்துள்ளார். ஒப்பந்தப்படி ரூ.2 லட்சத்தில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் சிறுமியை அழைத்துக் கொண்டு ராஜசேகர் பெங்களூருக்கு சென்று விட்டார்.
ஆனால் அங்கு சென்ற பின் தினந்தோறும் அந்த சிறுமியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சிறுமி தனது மூத்த சகோதரருக்கு தொலைபேசியில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சகோதரர் உதவியுடன் பெங்களூருவில் இருந்து தப்பித்து புங்கனூரை அடைந்து நேராக போலீசில் சென்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் நடந்த சம்பவம் என்று கருதி புங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அந்த சிறுமியை மாநில சமூக நலத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் உண்மை அனைத்து வெளிப்பட்டது.
சிறுமியின் தாய் ஷோபாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் அவர் பணம் வாங்கவில்லை என மறுத்த நிலையில் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் சிறுமி தான் படிக்க விரும்புவதாக கூறிய நிலையில், தாய்க்கு அறிவுரை வழங்கி கல்வி கற்க உதவுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆந்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.























