கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
கோவையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை நகரில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பராயன் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் உடனடியாக அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
ஆன்லைன் லாட்டரி விற்பனை
இதன் ஒரு பகுதியாக, சலாபி நகர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த சகுபார் சாதிக் (44) என்பவரையும், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த லதிப் (46) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குரிய இருவரிடமிருந்தும் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 4 செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனையில் கிடைத்த ரூ.2,46,700 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், சகுபார் சாதிக் மற்றும் லதிப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
கோவையில் மீண்டும் ஆன்லைன் லாட்டரி சர்ச்சை
தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகவும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு எதிரான காவல்துறையின் தொடர் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.























